
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் கலிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்குக் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு அங்குள்ள நியாய விலை கடை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார். அதன் பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசும் போது, “கலிக்கம்பட்டி கிராமத்திற்கு வரும் போதெல்லாம் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். காரணம் மும்மத மக்கள் ஒற்றுமையுடன் வாழும் கிராமங்களில் கலிக்கம்பட்டி கிராமமும் ஒன்று. குறிப்பாக பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் ஒற்றுமையுடன் வந்து கேட்பார்கள். கடந்த திமுக ஆட்சியின்போது 15 வருடங்களுக்கு முன்பு நிலக்கோட்டை பேரணையிலிருந்து குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டு அருகில் உள்ள கலிக்கம்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தினால் எதுவும் நடைபெறவில்லை. இப்போது அதை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு உள்ளேன். குறிப்பாக கலிக்கம்பட்டி கிராமத்திற்கு வைகை ஆற்று தண்ணியும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. குறிப்பாக ஆத்தூர் தொகுதியில் மட்டும் 15 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அதிமுக ஆட்சியில் அதை நிறுத்திவிட்டனர். நின்று போன முதியோர் உதவித்தொகை இப்போது அனைவருக்கும் கிடைக்கப் பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறேன். குறிப்பாக இப்பகுதியைச் சேர்ந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வரும் தார்ச் சாலையைச் சீரமைக்க மனு கொடுத்துள்ளார்கள். 10 நாட்களில் தார்ச் சாலை அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் தரமான தார் சாலைகள் அமைத்துக் கொடுக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முத்து முருகன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தனுஷ்கோடி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் ஆத்தூர் சட்டமன்ற முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் முருகன், தட்சினாமூர்த்தி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன் முருகன், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் பிரவீனா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் வாஞ்சி நாதன், கணேசன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர்கள் ஆலமரத்துப்பட்டி ராஜேந்திரன், எம்.சி.பாண்டியன், பொருளாளர் கருப்பையா, கலிக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர்கள் புவனேஸ்வரி, அருளரசன், கோமதி செல்வகுமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், ஆத்தூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராஜகணேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அரவிந்தன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் காணிக்கை சாமி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் நந்த கோபால், ரேகா அய்யப்பன், அரசு ஒப்பந்தக்காரர்கள் விக்னேஷ்வரன், ஜீசஸ் அகஸ்டின், மெல்வின், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் மாவீரன் நெல்லை சுபாஷ் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.