Skip to main content

சிக்கலில் தி.மு.க சேர்மன்; ‘கவுன்சிலைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்கணும்’ - கடுமைக்காட்டும் கவுன்சிலர்கள்!

Published on 11/06/2025 | Edited on 11/06/2025

 

councillor themselves have raised condemn against Sankarankovil chairman

தென்காசி மாவட்டத்தின் பெரிய தொழில் நகரமான சங்கரன்கோவில் நகராட்சியின் நிர்வாகம், மக்கள் பணிகள் ஸ்தம்பித்துள்ளது. “சிட்டிங் தி.மு.க. சேர்மன் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கையில்லை. அவர் கவுன்சிலைக் கூட்டி தன் மீதான நம்பிக்கையை மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்..” என்று மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் 24 பேர் நகராட்சியின் பொறுப்பு கமிசனரான நாகராஜனிடம் மனு அளித்துள்ளனர். இது சங்கரன்கோவில் நகராட்சி அரசியல் வட்டத்தில் தகிப்பைக் கிளப்பியிருக்கிறது.

கவுன்சிலர்கள் வலியுறுத்திய அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே மூன்று வருடமாக நகரின் அனைத்து வார்டுகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர்களோடு ஆளும் தி.மு.க.வின் கவுன்சிலர்களும் இணைந்தே செயல்பட்டது தான் இதன் ஹாட்டாபிக்.

councillor themselves have raised condemn against Sankarankovil chairman

30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 தி.மு.க. 9 அதன் கூட்டணியான ம.தி.மு.க. 2, காங் 1, எஸ்.டி.பி.ஐ. 1 மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 4 என்று தி.மு.க.வின் கவுன்சிலர்கள் பலம் 17 என்ற லெவலில் இருப்பதால், தேர்தலுக்குப் பிந்தைய சேர்மன் தேர்வில் இரு தரப்பு போட்டியாளர்களுக்கும் சம வாக்குகள் கிடைக்க, தர்ம நியாயப்படி குலுக்கல் முறையில் சேர்மனாக தி.மு.க.வினால் அறிவிக்கப்பட்ட உமாமகேஸ்வரி சேர்மனாக அறிவிக்கப்பட்டார்.அவர் தேர்வானதிலிருந்தே விவகாரங்கள் பின் தொடர்ந்திருக்கின்றன. 

சேர்மன் உமாமகேஸ்வரி மொத்தக் கவுன்சிலர்களின் வார்டுகளில் கட்டமைப்புகள், தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. தன்னையே வளர்த்துக் கொள்கிறார் என்று அ.தி.மு.க.கவுன்சிலர்கள் மட்டுமல்ல சேர்மனின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியான தி.மு.க.கவுன்சிலர்கள் 11 பேர் அவர்களுடன் கைகோர்த்து 2022ல் சேர்மன் உமாமகேஸ்வரியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போதைய சூழலில் அந்த தீர்மானம் பெரியலெவலில் பேசப்பட்டதால் ஆளும் கட்சித்தலைமைப் புள்ளிகளின் ஏற்பாட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வழியாக நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் சேர்மன் மற்றும் அவரது தரப்புகள் சுதாரிக்கவில்லை. மறுபடியும் வார்டுகளின் நலப் பணிகளில் முன்னேற்றமில்லை. பழைய நிலையே தொடர்ந்தது.  

கவுன்சில் அமைந்து மூன்று வருடமாகவே ஒரு வார்டில் கூட வேலைகள் நடக்கவில்லை குடிநீர் பராமரிப்பு, சுகதாதார, அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கவனமில்லை. மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிட்டு பதில் சொல்ல முடியாமல் போனதால் தான் இம்முறை சேர்மன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், அவர், தன் மீதான மெஜாரிட்டியைக் ஒரு வாரத்தில் கவுன்சிலைக் கூட்டி நிரூபிக்கவேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறோம் என்கிறார்கள் நாம் சந்தித்த, தி.மு.க. கவுன்சிலர்கள்.

ad

வார்டு நலன்கள் புறக்கணிக்கப்படுவதன் காரணமாக, நகரின் மெயின் பஜார், மற்றும் பக்தர்கள் திரளாக வந்து செல்கிற முக்கியமான ஆலயத்தைக் கொண்ட மையப்பகுதியான 13 வது, வார்டின் கவுன்சிலரான நாரயணன் மனக் கொதிப்பிலிருக்கிறார். “திரளான மக்கள் வந்து செல்லும் என்னோட வார்டு பணிகள் பற்றி பலமுறை நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்திருக்கிறேன் நகரின் சென்டர் பகுதியான இங்க அப்பப்ப நகராட்சி அதிகாரி வர்றாங்க போறாங்க. இங்க உள்ள நிலைமை தெரிஞ்சும் அவங்க கண்டுங்காணாமப் போறாங்க. அம்மன் கோவிலைச் சுற்றி குண்டும் குழியுமான ரோடு கழீவுநீர்க வெளியேற்றப்படாமல் அங்கங்க தேங்கிக் கிடந்து சுகாதாரக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது என்று மனுக்குடுத்தேன். அத தீர்மானத்தில வெச்சு கழிவுநீர் வாடிகாலை சுத்தம் செய்ய மட்டும் ரூ.16 லட்சம் நிதி பாஸ் பண்ணப்பட்டு ஒரு வருஷத்துக்கும் மேலாகிடுச்சு. வேலையே நடக்கல. அத இப்போது மாறிப் போன கமிசனர்ட்ட நான் அடிக்கடி வலியுறுத்தியும் நிதி இல்லை, பண்ட் வரட்டும்... வரட்டும்னு ஒரு வருஷத்துக்கும் மேலாக சொல்லிக் இழுத்தாடித்தார்கள். தவிர ரோடு வேலை சீரமைப்பிற்கும் அஜண்டா வைச்சோம். அந்தப் பிளான ஸ்கீம் ஓர்க்ல போடுறோம்னு 2 வருஷமாச் சொல்லிக் காலத்த கழிச்சிட்டு போயிட்டாங்க. சேர்மன்ட்ட பேசணும்னு நினைத்தால் அந்தம்மா போன எடுக்கவே மாட்டாங்க.

councillor themselves have raised condemn against Sankarankovil chairman

மக்களுக்குப் பதில் சொல்ல முடியல. மனக் கொதிப்புல் இருக்காங்க. நிதி வருது... டெண்டர் விடுறாங்க.. அதனை  சேர்மன் தரப்பினரே பினாமியாக எடுக்குறாங்க. ஆனால் வேலை நடந்ததாவே தெரியவில்லை. எந்த ஒரு வேலைன்னாலும் அதை தீர்மானமாக வைச்சு அவங்க பாஸ் பண்றதோட சரி. ஆனால் வேலை மட்டும் நடக்காது. என்னோட வார்டு தான் முன் உதாரணம். இதே போலத்தான் அனைத்து வார்டுகளின் நிலைமையும் இருக்கிறது. அதனால் கவுன்சிலர்கள் கொதிப்பிலிருக்காங்க. கட்சி பாகுபாடில்லாமல் கை கோர்த்து ஒன்றாக நிற்கிறார்கள்.

நகரின் சுகாதாரப் பணியோ பராமரிப்போ எந்தப் பணியாக இருந்தாலும் சரி சேர்மன் தரப்பு தான் டெண்டர் எடுக்க முடியும். உதாரணமாக 30 வர்டுகளிலும் உள்ள பைப்லைன், தண்ணீர் வால்வுகள், லீக்கேஜ் போன்ற பராமரிப்பிற்கான ரூ.40 லட்சத்திற்கான டெண்டர். அத சேர்மன் தரப்பினரே பினாமியாக எடுத்தார்கள். அதை முறையான லேபர்களை நியமித்து வேலய பாக்கணும்ல. ஆனால் அப்படிப் பண்ணல. 30 வார்டுகளுக்குமான இந்த மெயின்டெய்னன்சுக்காக குறைந்த பட்சம் 20 லேபர்களையாவது நியமிக்கணும். ஆனால் அப்படிச் செய்யாமல் இரண்டே லேபர்களை வைத்து பராமரிப்பு பணியை பண்றாங்க. எப்படி முறையாக வேலை நடக்கும். இதக் கேக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் எடுக்குற டெண்டர்களோட வேலை லட்சணத்துக்கு இதுதான் சாம்பிள். இதே போலத்தான் குப்பைகளை அள்ளுற டெண்டர் எடுத்தாலும் அதுக்கு முறையான லேபர்களை போடுவதில்லை. இப்படித்தான் வார்டுகளில் எந்த ஒரு பணியும் நடக்காமல் சீர் கெட்டுப் போயிருக்கு. எந்த ஒரு டெண்டரானாலும் அத ஆன்லைன் மூலமாக தான் நடத்த வேண்டும். ஆனால் இங்க அவர்களே, அவர்களுக்குத் தோதான நபர்களுக்கு டெண்டரை கொடுத்து, மந்த வேலைகளை முன் அனுமதி பெற்று செய்றாகன்னு முடிச்சிறுவாங்க. இப்படி டெக்னிக்காக ஒரு பைபாஸ் வேலயப்பண்றாங்க” என்றார் கொதிப்பாக.

councillor themselves have raised condemn against Sankarankovil chairman

8வது வார்டு கவுன்சிலரான சரவணன், “நான்கு வருடமாகிடுச்சி, 30 வார்டுகளிலும் முக்கியமான வேலை, வடிகால் பணி, சாலை பணி, சுகாதாரப்பணி என்று எதுவுமே நடக்கவில்லை. வரும் நிதிகள் என்னாச்சு? வார்டுகளோட பணிகளுக்கு ஏன் நிதி ஒதுக்கப்படவில்லை என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் பழைய நிர்வாகத்தில் வாங்குன கடனுக்கு வட்டிதான் கட்டிட்டு வருகிறோம் என்று பதில் சொல்றாங்க. சேர்மன் இதை பற்றி எதுவுமே பேசாமாட்டார். பொது நிதியில் தான் ஒடுது. வரும் தொகைகளை செட்கள் கட்ட, கடைகள் கட்ட, சின்னச் சின்ன பாலம் என்று அவர்களுக்கு வருமானம் பார்த்துதான் செய்றாங்க.  ஆனால் வார்டுகளில் எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை.

பேருந்து நிலையம் கட்டி முடித்து அங்கே 33 கடைகள் கட்டியாச்சி. ஒவ்வொரு கடைக்கும் கணிசமான லட்சங்கள் டெபாசிட் செய்யப்பாட்டிருக்கிறது. அதில் தான் இப்போது வண்டியே உருளுது. இரண்டு கோடிக்கு மேலதான் ஆன்லைன் டெண்டர். அதுக்குக் கீழே உள்ளது டெண்டர் முறை. அது சேர்மன் தரப்புகளுக்கே போகும். டோட்டலாக வார்டுக பணி முடங்கிப்போனதால் தான் சேர்மன் மீது நம்பிக்கையில்லை. ஒரு வாரத்தில் கவுன்சிலை கூட்டி மெஜரிட்டிய நிரூபிக்க வேண்டும் என்று  கெடு வைத்து வலியுறுத்தி கமிசனர்ட்ட மனு குடுத்துருக்கோம். பின்வாங்கப் போவதில்ல” என்று அழுத்தமாக  கூறினார்.

councillor themselves have raised condemn against Sankarankovil chairman

சேர்மன் உமா மகேஷ்வரியை நாம் தொடர்புகொண்டு, ‘வார்டுகள் பணி முடக்கம் பற்றிய கவுன்சிலர்களின் புகார்கள், நம்பிக்கையில்லா தீர்மானம்..’ பற்றி கேட்டதில், சற்று யோசித்தவர், “30 வார்டுகளிலும் வேளை நடக்கத்தான் செய்கின்றன. அதை அதிகாரிகளும் கவனிக்கத்தான் செய்கிறார்கள். எங்க கட்சிக்காரங்களும் அந்தத் தீர்மானத்தை கொடுத்திருக்காங்க. எங்க லைன்ல யாரும் டெண்டர் எடுக்கவில்லை”என்று சொல்லி லைனைத் துண்டித்த சேர்மன், மறுபடியான நமது அழைப்பை ஏற்கவில்லை.

இப்படி விவகாரங்கள் பயணிக்க அண்மையில், பொது வடிகால், சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.8.70 கோடியும், அடுத்து பள்ளிக்கூடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ரூ.6 கோடி என்றும் நிதிகள் வந்திருக்கின்றனவாம். இவைகளின் பலாபலன்களை எப்படி வைத்துக்கொள்வதென்று மன்ற கவுன்சலின் மூன்று அதிகாரமிக்க பவர் சென்டர்களுக்கிடையேயான போட்டியின் விளைவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வலியுறுத்தல் என்றும் கிசு கிசுக்கப்படுகின்றன.

councillor themselves have raised condemn against Sankarankovil chairman

இதனிடையே நகர்மன்றக் கவுன்சலில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றியும் மாற்றம் வேண்டும் என்றும் தி.மு.க.வின் கட்சித் தலைமைக்குப் புகார்கள் போக, கட்சித் தலைமையோ கடும் எச்சரிக்கை விடுக்கிற மனநிலையில் உள்ளதாம்.

சிக்கலுக்கு மேல் சிக்கல். விடாது கருப்பு.