Skip to main content

சும்மா இருந்தவங்கள சீண்டி விட்டாங்க.. இன்னைக்கு? ஆம் ஆத்மி கடந்து வந்த பாதை...

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Aam Aadmi Party political timeline

 

ஊழலுக்கு எதிரான கட்சி என்று ‘சாமானிய மனிதன்’ எனும் அர்த்தம் கொண்ட ஆம் ஆத்மி கட்சி 2012ல் டெல்லியில் ஒரு மாநிலக் கட்சியாக உருவானது. அது இன்று இந்திய நாட்டின் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு அரசியல் கட்சி தேசியக் கட்சியாக வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்படி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது இரண்டு இடங்களையும், 6 சதவீத வாக்குகளையும் பெற வேண்டும். அதன்படி தற்போது இந்தியாவில் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி ஆகிய 7 காட்சிகள் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஆம் ஆத்மி இணைந்துள்ளது.

 

அரசு அதிகாரி டூ அரசியல்வாதி:

ஹரியானா மாநிலத்தில் சிறிய கிராமத்தில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறை பணியில் சேர்ந்து டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் அரசு துறைகளில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உணர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது பணியில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்று டெல்லியை மையமாகக் கொண்ட ‘பரிவர்த்தன்’ என்ற குடிமக்கள் இயக்கத்தைத் தொடங்கி லட்சம் ஊழல் தொடர்பான மக்கள் புகார்களை விசாரித்து தீர்வுக்கு வழிவகை செய்தார். இப்படி தொடர்ந்து ஊழலுக்கு எதிராகவும், சமூக நலன் சார்ந்தும் குரல் கொடுத்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார்.

 

தேசியக் கட்சியின் முதல் விதை:

ஆம் ஆத்மிக்கு கெஜ்ரிவால் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு கெஜ்ரிவாலின் அரசியல் வருகைக்கு அண்ணா ஹசாரேவும் முக்கியம். கடந்த 2011 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் போட்டி நடத்தியதில் ஊழல் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சந்தித்தது. அப்போது இதனை எதிர்த்து அண்ணா ஹசாரே, ஊழல் செய்யும் உயர்பொறுப்பில் இருப்பவர்களைத் தண்டிக்கும் ‘ஜன் லோக்பால்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 74 வயதில் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அண்ணா ஹசாரேவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். அதில் முக்கியமானவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதன் பின் லோக்பால் குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டு, பின்பு தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஜன் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அண்ணா ஹசாரே எதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாரோ அது அந்தச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டதா என்பது வேறு கதை..

 

Aam Aadmi Party political timeline

 

இதற்கிடையில் அண்ணா ஹசாரேவிடம் இருந்து பிரிந்த கெஜ்ரிவால், தனது நண்பர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு அடுத்தாண்டே அதாவது 2013 இல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி. இந்தத் தேர்தலில் 15 ஆண்டுகளாக டெல்லியை ஆண்டு வந்த காங்கிரஸின் முதல்வர் ஷீலா தீக்‌ஷித்தை, புதுதில்லி சட்டமன்றத் தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தார். ஆனால், அதே காங்கிரசின் ஆதரவோடு தொங்கு சட்டப்பேரவை மூலம் ஆட்சியமைத்து முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்.

 

ஆட்சி அமைத்த 49 நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக ஆம் ஆத்மிக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு தீவிர முனைப்புடன் மக்கள் பணியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி, வாழ்வா சாவா என்ற நெருக்கடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து 70 தொகுதிகளில் 67ல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால். இந்த வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

 

தொடர் வெற்றியும்... தேசிய அங்கீகாரமும்:

2013, 2015 என இரண்டு வெற்றிகளைக் கண்ட ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக 2020 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இப்படி மாநில அளவில் சம்பவம் செய்துகொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில் கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, டெல்லியைத் தாண்டி கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும், பஞ்சாபில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியையும் அமைத்தது. பஞ்சாப் தந்த தேர்தல் வெற்றியின் உத்வேகத்தில் அதே முனைப்புடன் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிட்டு ஐந்து தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதோடு 14 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

 

Aam Aadmi Party political timeline

 

டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, கோவா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்க தேவையான 2 தொகுதிகளைக் கைப்பற்றியதோடு, அங்கு 6 சதவீத வாக்குகளையும் பெற்றது. இருப்பினும் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட இன்னும் ஒரு மாநிலத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளையும், 6 சதவீத வாக்குகளையும் பெற்றாக வேண்டும் என்ற சூழல் இருந்த நிலையில், நேற்று  வெளியான குஜராத் தேர்தல் முடிவில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியும், 14 சதவீத வாக்குகளைப் பெற்றும் தற்போது தேசியக் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.

 

தேசிய அரசியலில் காங்கிரஸ், பாஜகவை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்குப் புதியதாக ஆம் ஆத்மி எனும் மாற்று கிடைத்துள்ளது. ஆனால், அது உண்மையில் மக்களுக்கான மாற்றுக்கட்சியா என்பதை அதன் நிலைப்பாடு, செயல்பாடு ஆகியவை தீர்மானிக்கும். அதற்குமேல், மக்கள் அதனை தங்களுக்கான மாற்றுக் கட்சியாக ஏற்றுக்கொள்வார்களாக என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.