
















தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 7-வது ஒசூர் புத்தகத்திருவிழா தொடங்கியது. 13.07.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி அளவில் கே.ஏ.பி. கல்யாண மண்டபத்தில் புத்தகத் திருவிழாவின் தலைவர் ஆர்.துரை தலைமையில், புத்தகத்திருவிழா செயலாளர் இரா.பாலகிருஷ்ணன் வரவேற்புரை சொல்லி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் ஆ.சிவக்குமார், வழக்குறைஞர் ஜே.பி.ஜெயபிரகாஷ், முத்துநிலவன், ஏ.என்.கே. பிரிண்டர்ஸ் வீ.கே.அண்ணாமலை, சிவந்தி அருணாச்சலம், சு.பொ.அகத்தியலிங்கம், முத்துநிலவன், ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். 7-வது புத்தகத்திருவிழாவை எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம், அறிமுகம் செய்து வைத்தார்.
நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் புத்தகத் திருவிழாவை அனைவரின் கரவொலிக்கு மத்தியில் திறந்து வைத்து உரையாற்றினார்.
அவரது உரையில் ‘ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து PMC உதவியுடன் நடத்தும் 7-வது ஒசூர் புத்தகத் திருவிழாவை திறந்து வைப்பதில் நக்கீரன் குடும்பம் பெருமை கொள்கிறது.
அதுமட்டும் அல்லாமல் இந்த புத்தக திருவிழா இவ்வளவு சிறப்பாக நடைபெற காரணமாக இருக்கும் அனைவருக்கும் நக்கீரன் குடும்பம் தலைவணங்குகிறது. எனக்கு தந்துள்ள தலைப்பு 'எண்ணமும் எழுத்தும்'. ஒரு காலத்தில் எதை எழுத வேண்டும் என எண்ணி எழுதினார்கள், ஆனால் தற்பொழுது எதையுமே எழுதலாம் என்ற நிலையுள்ளது.
நாம் அனைவரும் செல்போன்களில் மூழ்கி உள்ள காலத்தில் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில் புத்தகக் கண்காட்சியை வணிக நோக்கமின்றி சேவை மனப்பான்மையும் பலதரப்பட்ட மக்களின் கூட்டுமுயற்சியால், ஊர் கூடி தேர் இழுக்கும் விதத்தில் அனைவரும் இணைந்து சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு சீரிய முறையில் இப்புத்தகத் திருவிழா நடைபெறுவது பெருமையளிக்கிறது. புத்தகத் திருவிழாவை தொடர்ந்து சிறப்புற நடத்த இந்த குழுவினர்க்கு நக்கீரன் தனது ஒத்துழைப்பை நல்கும். அனைவருக்கும் நன்றி.” என முடித்தார்.