Skip to main content

ஹைடெக் ஃபேமிலி ஃபார்முலாவுடன் வந்த வாரிசு; வென்றாரா? தோற்றாரா? - விமர்சனம்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

vijay varisu movie review

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொங்கல் விடுமுறையில் அஜித் - விஜய் படங்கள் நேருக்கு நேர் மோதல். அஜித்துக்கு துணிவு, விஜய்க்கு வாரிசு. இதில் விஜய்யின் வாரிசு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

 

மிகப்பெரிய தொழிலதிபரான சரத்குமார் தனது இரண்டு மூத்த மகன்களுடன் கம்பெனியை நடத்தி வருகிறார். இவரது தொழில் போட்டியாளர்களை இவரது இரண்டு மகன்களை வைத்துக் காய் நகர்த்தியே மிக எளிதாக வெற்றி கொள்கிறார். தன் குடும்பம், தொழில் என இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் குடும்பத்தில் இருப்பவர்களையே சொந்தத் தொழிலிலும் ஈடுபடச் செய்து அதில் வெற்றியும் பெறுகிறார் சரத்குமார். இது சுத்தமாகப் பிடிக்காத சரத்குமாரின் கடைசி மகன் விஜய் சொந்தத் தொழில் செய்ய முடிவெடுக்கிறார். இது சரத்குமாருக்குப் பிடிக்காமல் போகவே அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு தொழில் போட்டியில் சரத்குமாருக்கு எதிரிகள் ஒருபுறம் அதிகரிக்க, இன்னொரு புறம் அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, இவரது குடும்பமும் தொழிலும் சரிகிறது. இந்தச் சரிவை சரி செய்ய சரத்குமாரின் தொழில் வாரிசாகக் களம் இறங்கும் நாயகன் விஜய் தன் குடும்பத்தையும், தொழிலையும் சரிவிலிருந்து மீட்டாரா? இல்லையா? என்பதே வாரிசு படத்தின் மீதிக் கதை.

 

vijay varisu movie review

 

விஜய் என்ற ஒற்றை காந்த சக்தியை வைத்துக்கொண்டு மொத்த குடும்ப, ரசிகர் பட்டாளத்தையும் திரையரங்கிற்கு இழுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி. ஒரு ஹைடெக்கான குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை குடும்பத்தின் இளைய வாரிசு எப்படி தீர்த்து வைக்கிறார் என்ற ஒற்றை வரிக் கதையை மூன்று மணி நேரப் படமாகக் கொடுத்து ரசிகர்களை சோதிக்கச் செய்துள்ளது வாரிசு திரைப்படம். படம் ஆரம்பித்த முதல் பாதி முழுவதும் குடும்பம் சென்டிமென்ட் என மிக நீளமாக நகரும் திரைப்படம்., இரண்டாம் பாதியில் சற்றே வேகமெடுக்க ஆரம்பித்து மீண்டும் ஆங்காங்கே சில ஸ்பீடு பிரேக்கர்களுக்கு இடையே பயணித்து, சின்ன சின்ன கூஸ்பம்ப் காட்சிகளோடு இணைக்கப்பட்ட பாடல்களோடு படம் முடிவடைகிறது. ஒரு படமாகப் பார்க்கும் பொழுது ஆங்காங்கே வரும் சில எபிசோடுகள் மட்டும் கைதட்ட வைத்தாலும் மொத்தப் படமாகப் பார்க்கும் பட்சத்தில் மிகவும் இழுவையாக எடுக்கப்பட்ட படத்தின் நீளம் ரசிகர்களுக்கு அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. தெலுங்கில் நீண்ட நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ஹைடெக் குடும்ப கமர்சியல் சென்டிமென்ட் படங்களின் சாயல்களை உள்ளடக்கி ஒரு கலவையாகக் கொடுத்து அதைத் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகப்படுத்தி, அதை ரசிகர்களிடம் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளது வாரிசு திரைப்படம். கதையும், திரைக்கதையும் பழைய தெலுங்கு படங்களின் திரைக்கதை ரூட்டிலேயே பயணித்திருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏனோ சில விஷயங்கள் மிஸ் ஆவது போன்ற உணர்வைக் கொடுத்துள்ளது. படத்தின் பிளஸ் ஆக பார்க்கப்படுவது விஜய்யும், தமனின் இசையுமே. மற்றபடி கதையும், திரைக்கதையும் பழைய தெலுங்கு படங்களின் ரூட்டிலேயே பயணித்திருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

 

விஜய் எப்பொழுதும் போல் மிகவும் சார்மிங்காக இருக்கிறார்.  நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் தெறிக்கவிட்டுக் கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சில்லறைகள் சிதற விடச் செய்கிறார். மொத்தத்தில் விஜய் அவருக்கான வேலையைக் கணக் கச்சிதமாகச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். என்ன, கதைத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்! படத்தின் பெரும் பகுதி காட்சிகளில் வரும் அப்பாவுக்கும் மகனுக்குமான காட்சிகள், அம்மாவுக்கும் மகனுக்குமான காட்சிகள் விஜய்யின் சொந்த வாழ்க்கையையும் சற்று பிரதிபலித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுவே விஜய் இப்படத்தை தேர்வு செய்ததற்குக் காரணமாக இருக்குமோ என்ற எண்ணமும் ஒரு பக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

vijay varisu movie review

 

நாயகி ராஷ்மிகா மந்தனா வழக்கமான நாயகியாகவே வந்து செல்கிறார். படத்தில் இவர்தான் கதாநாயகி என்று சொல்ல வேண்டுமே என்ற காரணத்திற்காக அவருக்கென்று இரண்டு மூன்று காட்சிகளும், இரண்டு பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவருக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை. வழக்கமான காமெடியனாக வந்து செல்லும் யோகி பாபு இந்த முறையாவது சிரிக்க வைப்பார் என்று எதிர்பார்க்க வைத்து மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார். இவருக்கும் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தாலும், காமெடி காட்சிகள் என்னவோ கிச்சு கிச்சு மூட்ட மறுத்துள்ளது. விஜய்யின் தந்தையாக வரும் சரத்குமார் மற்றும் தாயாக வரும் ஜெயசுதா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாகத் தாயாக வரும் ஜெயசுதா பல இடங்களில் உருக வைக்கிறார். விஜய்யின் அண்ணன்களாக நடித்திருக்கும் ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் அவருக்கான வேலையைத் தனது அனுபவம் நடிப்பின் மூலம் சிறப்பாகச் செய்துள்ளார். மற்றபடி முக்கியக் கதாபாத்திரத்தில் வரும் பிரபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ், வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேஷ் மற்றும் இவர்களுடன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பாக நடித்து படத்தைக் கரை சேர்க்க முயற்சி செய்துள்ளனர்.

 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது. ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு எந்த அளவு ஃபிரேம் பியூட்டி வேண்டுமோ அந்தளவு சிறப்பாகக் கொடுத்து ஒரு பெரிய கமர்சியல் படம் பார்த்த உணர்வைத் தனது ஒளிப்பதிவு மூலம் கொடுத்திருக்கிறார் கார்த்திக் பழனி. படத்தில் விஜய்க்கு அடுத்து இன்னொரு பெரிய நாயகன் யார் என்றால் அது இசையமைப்பாளர் தமன் தான். இவரின் ஆராரோ, தீ தளபதி, ரஞ்சிதமே பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இவை ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளன. அதேபோல் பின்னணி இசையிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளார் தமன். இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி படத்தைக் கரை சேர்க்க முயற்சி செய்துள்ளது.

 

விஜய் என்ற ஒற்றை மந்திரத்தை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களுக்கும் பெண் ரசிகைகளுக்கும் ஓரளவு திருப்தி கொடுத்தாலும், பொதுவான ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

 

வாரிசு - கிரின்ஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.