Skip to main content

பூலோகம் தந்த கூட்டணியின் படைப்பு - ‘அகிலன்’ விமர்சனம்! 

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Agilan tamil movie review

 

பொன்னியின் செல்வன் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்து வெளியாகி இருக்கும் படம் அகிலன். பூலோகம் தந்த வெற்றியை அடுத்து அதே டீம் உடன் இணைந்து இப்படத்தை கொடுத்துள்ள ஜெயம் ரவி முந்தைய படத்தில் பெற்ற வரவேற்பை இப்படம் மூலமும் பெற்றாரா இல்லையா?

 

சென்னை துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டு பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி இந்தக் கடத்தல் மாஃபியாவின் தலைவனான கபூரை சந்திக்க திட்டம் போடுகிறார். ஒரு கட்டத்தில் கபூரை சந்திக்கும் செய்முறை அவர் கொடுக்கும் ஒரு மிகப்பெரிய அசைன்மென்ட்டை செய்து முடிக்க களம் இறங்குகிறார். இதற்கு தடையாக துறைமுகத்தின் சீஃப் போலீஸ் காவலரும் டிஐஏ அதிகாரியுமான சிராக் ஜானி வருகிறார். இந்த தடையை மீறி ஜெயம் ரவி கபூர் கொடுத்த அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடித்தாரா? இல்லையா? ஜெயம் ரவி இந்த கடத்தல் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? அவர் எப்படி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக மாறுகிறார்? என்பதே அகிலன் படத்தின் மீதி கதை.

 

பூலோகம் படம் மூலம் வட சென்னை பகுதியில் இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தை மிக இயல்பாக காட்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இப்படத்தில் துறைமுகம் மற்றும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை நல்ல மெசேஜோடு கூடிய கதையாக ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த எந்த படத்திலும் ஒரு துறைமுகத்தை இந்த அளவு அக்குவேரு ஆணிவேராக பிரித்துக் காட்டியது கிடையாது. அந்த அளவு ஒரு துறைமுகத்தில் இரண்டரை மணி நேரம் சுற்றிப் பார்ப்பது போன்ற உணர்வை இப்படம் மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். காட்சிப்படுத்துதல் மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகும் என்பதை யூகிக்கும் படி இருந்தாலும் அதை மிக திரில்லிங்காகவும், ரசிக்கும் படி சுவாரஸ்யமாகவும் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி படத்தை கரை சேர்த்திருக்கிறார். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக திரைக் கதையை அமைத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் படியான காட்சி அமைப்புகள் மூலம் முதல் பாதி நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சில பல வேகத்தடைகள் இருந்தாலும் கடைசி கட்டத்தில் நிறைவான காட்சி அமைப்புகள் மூலம் படம் முடிந்து ஒரு நல்ல மேசேஜோடு கூடிய திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளது. 

 

படத்துக்கு படம் நிறைவான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வரும் ஜெயம் ரவி இப்படம் மூலம் வட சென்னையை சேர்ந்த அகிலன் என்ற கதாபாத்திரமாகவே மாறி உள்ளார். இவரது உடல் அமைப்பும் வசன உச்சரிப்பும் அகிலன் என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உள்ளது. காட்சிக்கு காட்சி மிகவும் அசால்டாக நடித்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றுள்ளார் ஜெயம் ரவி. வழக்கமான கதாநாயகியாக வரும் ப்ரியா பவானி சங்கர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். இவருக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. தனக்கு கொடுத்த நேரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டு சென்று இருக்கிறார். இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் டானியா ரவிச்சந்தர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். இன்டெலிஜென்ட் ஆஃபீஸ்ராக வரும் சிராக் ஜானியின் மிரட்டலான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவரது மிடுக்கான தோற்றமும், கம்பீரமான வசன உச்சரிப்பும் ஜெயம் ரவிக்கு நன்றாக ஈடு கொடுத்து நடித்துள்ளார். இனி வரும் காலங்களில் இவரை அதிகமாக போலீஸ் கதாபாத்திரங்களில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. படத்தில் சிறிய வில்லனாக வரும் ஹரிஷ் பெரோடி வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார். வில்லன் கபூர் ஆக வரும் இந்தி நடிகர் தருண் அரோரா தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். யூனியன் தலைவர் ஜனநாதன் ஆக வரும் மதுசூதனன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டு கவனம் பெற்றுள்ளார். படத்தில் ஜெயம் ரவி நண்பர்களாகவும் அடியாட்களாகவும் நடித்துள்ள நடிகர்கள் சிறப்பான பங்களிப்பு செய்து படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

 

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் கடல், கப்பல், ஹார்பர் என அதை சார்ந்த இடங்களை பல ஆங்கில்களில் சிறப்பாக காட்சிப்படுத்தி இரண்டரை மணி நேரம் ஹார்பருக்கு கூட்டிச் சென்று சுற்றிக் காட்டி விட்டு கூட்டி வந்துள்ளார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சிறப்பான காட்சி அமைப்புகளும் படத்தின் இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறது. வழக்கம்போல் இரைச்சலான பின்னணி இசை மூலம் பார்ப்பவர்கள் காதை கிழித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வித்தியாசமாக எதையும் முயற்சி செய்யாமல் தனக்கு என்ன வருமோ அதையே முந்தைய படங்களை போல் இப்படத்திலும் கொடுத்து கவனம் ஈர்க்க முயற்சி செய்துள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் மனதில் பதியவில்லை. 

 

பூலோகம் படத்தில் குத்து சண்டை மற்றும் அதைச் சுற்றி நடக்கும் அரசியலை அதிரடியாகவும், தெள்ளத் தெளிவாகவும் காட்டிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இப்படத்தில் ஹார்பரில் நடக்கும் ஊழல்களையும், சரக்கு கப்பல்களால் நமக்கு ஏற்படும் விலைவாசி உயர்வுக்கான காரணங்களையும், தெளிவாக விளக்கி கூறி அதில் இருக்கும் அரசியலை அகிலன் படம் மூலம் பிரித்து மேய்ந்துள்ளார். குறிப்பாக கதையைக் காட்டிலும், திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி மிகவும் டீட்டியலாக காட்டி மீண்டும் ஒரு வெற்றி படத்தை அகிலன் மூலம் கொடுத்துள்ளார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.

 

அகிலன் - புது அனுபவம்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!