Skip to main content

“எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல” - விஷ்ணு விஷால் விமர்சனம்

Published on 12/04/2025 | Edited on 12/04/2025
vishnu vishal crticises csk and ms dhoni

ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கடந்த மாதத்தில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சி.எஸ்.கே. அணி 6 போட்டியில் 1 போட்டியில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடமான 9வது இடத்தில் இருக்கிறது. முதல் போட்டியைத் தவிர்த்து அடுத்து அடுத்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. 

இதில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். காரணம் சின்னை அணி கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக தோனி கேப்டனாக இருந்தார். மேலும் சென்னையில் நடந்ததால் கூடுதல் ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்தனர். மேலும் தோனி நிச்சயம் ஆறுதல் வெற்றி கொடுப்பார் என நம்பினர். ஆனால் அவர்களுக்கு கடும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. சென்னை அணி கொல்கத்தா அணியிடம் படு தோல்வியடைந்தது. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி வழக்கத்திற்கு மாறாக 9வது வரிசையில் இறங்கி ஒரு சிக்சர் மற்றும் ஃபோர் கூட அடிக்காமல் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து எல்.பி.டபள்யூ-வில் அவுட் ஆனார். இது ரசிகர்களை கடும் கோவத்துக்கும் அதிருப்திக்கும் ஆளாக்கியது. இது குறித்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இதனிடையே நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது கொடூரமானது. ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் வர வேண்டும். எந்தவொரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்கு தானே விளையாட வேண்டும். இவர்கள் அப்படி விளையாடவில்லையா? இது இப்போது ஒரு சர்க்கஸை பார்ப்பது போல் இருக்கிறது. எந்தவொரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் ஐ.பி.எல். தொடரையும் தோனியையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தாலும் மறைமுகமாக அவர் இதைத் தான் குறிப்பிடுகிறார் என அவரது பதிவின் கீழ் கிரிக்கெட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்