
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் பெருவாரியான அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.170 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் பல்வேறு இடங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக 'ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடியும் கேட்டு இளையராஜா தரப்பில் அவருடைய வழக்கறிஞர் சார்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் பாடலை பயன்படுத்தியதற்காக ராயல்டி தொகையை தர வேண்டும் அல்லது பாடல்களை நீக்க வேண்டும் என்றும் 7 நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இளையராஜா நோட்டிஸ் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான ரவி சங்கர் பதிலளித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய அவர், “படத்தில் நாங்கள் பயன்படுத்திய பாடல்களுக்கு அதன் உரிமைகளை வைத்துள்ள இசை நிறுவனங்களிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். அவர்களிடமிருந்து தடையில்லா சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம்” என்றுள்ளார்.