
திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் திரவிடக் கழக தலைவர் கீ.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “திரைப்பட நடிகர் ராஜேஷ் (வயது 75) அவர்கள் மறைவுற்றார் என்பதையறிந்து வருந்துகிறோம். சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்களது உறவினர் நடிகர் ராஜேஷ். தமிழ்த் திரைப்பட உலகில் தனது தனித்தன்மையான நடிப்பாலும், தெளிவான தமிழ் உச்சரிப்பாலும் புகழ்பெற்றவர். 2021-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசால் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு திறம்பட செயலாற்றியவர். தமிழ்ப் பற்றாளர்; தந்தை பெரியார் மீதும், நம் இயக்கத்தின் மீதும் பற்றுக் கொண்டவர். அவரது மறைவால் வாடும் உறவுகளுக்கும், திரைப்படத் துறையினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.