Skip to main content

தோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும்! - ரெய்னா உறுதி

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

தோனிக்காக இந்த சீசனின் ஐ.பி.எல். கோப்பையை வெல்லவேண்டும் என சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்திருக்கிறார். 

 

Raina

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘கம்பேக்’ கொடுத்த சென்னை அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் ஆறு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை அணி, இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. அதேபோல், தற்போதைய சீசனையும் சேர்த்து அனைத்து சீசன்களிலும் (தடை நீங்கலாக) ப்ளே ஆஃபிற்கு தகுதிபெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

 

இந்நிலையில், கோப்பையை வெல்லும் கனவு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ‘2008ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வருபவர் கேப்டன் தோனி. அவர் எனக்கு நீண்டநாள் நண்பரும் கூட. இந்த சீசனின் தொடக்கத்தில் சகவீரர்களின் மத்தியில் உருக்கமாக பேசினார். அதேபோல், அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தனது விளையாட்டின் மூலம் விரட்டியடித்திருக்கிறார். சென்னை அணி 2011ஆம் ஆண்டிற்குப் பின் ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. இந்தமுறை, எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தோனிக்காக நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும். ஒருங்கிணைந்து செயல்பட்டு எங்கள் இலக்கை அடைவோம்’ என தெரிவித்துள்ளார்.