Skip to main content

ஒரு முறை, இரு முறை அல்ல... ஒவ்வொரு முறையும் அசத்திய அணி...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

2011-ஆம் ஆண்டில் 139, 2013-ல் 148, 2017-ல் 129, 2019-ல் 149. இவை ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி டிபண்ட் செய்த ரன்கள். குறைந்த ரன்களை டிபண்ட் செய்வதில் வல்லவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளனர் மும்பை அணியின் பவுலர்கள்.

 

mi

 

2011 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கோப்பை, 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பை என வென்ற 6 இறுதிப்போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்திருந்தது. இதில் 2011-ஆம் ஆண்டு ஹர்பஜன் கேப்டன். மற்ற அனைத்து போட்டிகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார்.
 

தாகூரின் பவுன்சர்கள், தாஹிரின் சுழல், பொல்லார்டின் இறுதிநேர அதிரடி, பொல்லார்டுக்கு வீசிய அகலப்பந்து சர்ச்சை, மீண்டும் சொதப்பிய சென்னை பேட்டிங், தோனியின் சர்ச்சைக்குரிய ரன் அவுட், வாட்சனின் போராட்ட குணம் கொண்ட பேட்டிங், மிடில் ஓவரில் சஹாரின் அசத்தல் பந்துவீச்சு, டெத் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவின் மிரட்டலான பவுலிங், மலிங்காவின் கடைசி ஓவர் த்ரில்லிங் என நேற்றைய போட்டி எதிர்பார்த்தது போலவே பல பரபரப்புகளை கொண்டிருந்தது.
 

2013-ல் பொல்லார்ட் 32 பந்துகளில் 60 ரன்கள், 2017-ல் குருணல் பாண்டியா 38 பந்துகளில் 47 ரன்கள், 2019-ல் தனது பிறந்தநாளில் மீண்டும் பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் என முதல் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு வீரர் அடித்த ரன்களே அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

 

pollard

 

இந்த வருடம் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் முதல் பேட்டிங்கின்போது 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. வார்னர், பேர்ஸ்டோவ் என அச்சுறுத்தும் பேட்டிங் லைன் கொண்ட சன்ரைசர்ஸ் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 

மற்ற அணிகளை ஒப்பிடும்போது மும்பை அணியின் பவுலிங் அட்டாக் மிகவும் பலமாக இருந்து வருகிறது. மேலும், மும்பை அணியின் பயிற்சியாளர்களின் அனுபவமும் இதற்கு ஒரு காரணம். மன ரீதியாக குறைந்த ரன்களை டிபண்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே இரண்டாவது இன்னிங்சை விளையாடுகின்றனர்.
 

அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்பை அணி மிகவும் அசத்தலாக செயல்படுகிறது. சென்ற முறை ரெய்னா, ஜடேஜா போன்ற இடது கை ஆட்டகாரர்களுக்காக அணியில் சேர்க்கப்பட்ட ஜெயந்த் யாதவ் ரெய்னாவை வீழ்த்தினார். இந்த முறை மைதானத்திற்கு ஏற்ப ஒரு கூடுதல் ஃபாஸ்ட் பவுலர் தேவைப்பட்டதால் அவருக்கு பதிலாக இந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த மிட்செல் மெக்லீனகான் அணியில் சேர்க்கப்பட்டார்.

 

மைதானத்தின் தன்மை, எதிரணியின் பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீரர்களை தேர்வு செய்வதில் மற்ற அனைத்து அணிகளைவிட மும்பை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு டீம் மேனேஜ்மண்ட், பயிற்சியாளர்கள் யூனிட், கேப்டன்ஷிப் ஆகியோர் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
 

ஒரு ஆட்டத்தை மாற்றக்கூடியது பீல்டிங். பெரும்பாலும் சிறப்பாக பீல்டிங் செய்பவர்கள் மும்பை அணியினர். ஆனால் நேற்று 3 கேட்ச்கள், இரண்டு ரன் அவுட்கள் மிஸ் செய்தனர். குறைந்த ரன்களை டிபண்ட் செய்கையில், இவ்வளவு மிஸ் சான்ஸ், தேவையில்லாமல் சென்ற 10+ ரன்களையும் தாண்டி மும்பை வென்றது பெரிய சாதனை தான். 
 

இக்கட்டான சூழ்நிலையில் அணியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை ரோஹித் தெளிவாக உணர்ந்திருக்கிறார். எதிரணியின் பேட்ஸ்மேன்களின் பிளஸ், மைனஸ் அறிந்து பவுலர்களை சரியான முறையில் கையாண்டுள்ளார். கள வியூகம் மற்றும் வீரர்களின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எந்த இடத்தில் பயன்படுத்துவது என கேப்டன்சியில் மேலும் மேலும் முதிர்ச்சியடைந்து வருகிறார் ரோஹித் சர்மா.
 

பெரும்பாலும் மற்ற அணியுடன் விளையாடும் போதும் தோனியின் ஸ்மார்ட் ஐடியா சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தரும். மும்பை அணியுடன் மோதும்போது அதே ஸ்மார்ட் ஐடியா மூலம் விளையாடினாலும், மும்பை அணி டபுள் ஸ்மார்ட்டாக சென்னை அணியை வீழ்த்திவிடுகிறது. இந்த சீசனில் சென்னை அணியை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் சுலபமாக வெற்றி பெற்றது மும்பை அணி. இறுதிப்போட்டியில் மட்டுமே கடைசி வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது மும்பை அணி.  
   

இதுவரை  ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிகளை 6 முறை சந்தித்த ரோஹித் சர்மா ஒரு முறை கூட தோல்வியடையவில்லை. 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சர்மாவின் மும்பை அணி 3 முறை தோனி தலைமையிலான சென்னை அணிக்கு எதிராகவும், ஒரு முறை தோனி விளையாடிய புனே அணியுடனும் வென்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல. ஒவ்வொரு முறையும் தோனி அணியை வீழ்த்துவது சாதாரண செயல் அல்ல. இது சர்மாவின் கேப்டன் ஸ்கில்களை எடுத்துக் காட்டுகிறது.

 

 

 

 

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார். 

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.