
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் கே.வி. நாகராஜன் என்பவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் வயலூர் சீனிவாச நகரை சேர்ந்த பொன்னசாமி மகன் சரவணன் என்பவர் எலெக்டிரிக்கல் சூப்பர்வைராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிறுவனத்திற்குக் கூடுதல் மின்னழுத்தம் தேவைப்பட்டதால், 175 கே.வி.ஏ.வில் (KVA) இருந்து 200 கே.வி.ஏ.க்கு மின்னழுத்தம் மாற்றம் செய்யக் கடந்த 07.11.2005 ஆன்று அப்போது திருச்சி மன்னார்புரம் மின்சார வாரியத்தில் கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்த ஆறுமுகம் என்பவரிடம் புகார்தாரர் சரவணன் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து கூடுதல் தலைமை பொறியாளர் ஆறுமுகம் கூடுதல் மின்னழுத்தம் வழங்க முதலில் ரூ.10,000 லஞ்சமாகக் கேட்டு, அதில் முன் பணமாக ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். அதற்குச் சரவணன் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல், கடந்த 07.11.2005 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீதுடி.எஸ்.பி. சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது புகார்தாரர் சரவணனிடமிருந்து ஆறுமுகம் லஞ்சப்பணம் ரூ.5000 கேட்டுப் பெற்ற போது கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து இன்று ( 18.06.2025) ஆறுமுகத்திற்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7இன் படி 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10000 அபராதமும் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் அபராதம் ரூ.10000 விதித்தும், தண்டனையை ஏகபோக காலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் சாட்சிகளை ஆஜர் செய்தும், சிறப்பு அரசு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி தண்டனை பெற்றுதர உதவி புரிந்துள்ளனர்.