
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் 4 பேர் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 4 பேரைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேலும் 4 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது, இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகமது அலி, ஜவஹர் சாதிக், ராஜாவில் ராஜா அப்துல்லா மற்றும் ஷேக் தாவூத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி (23.10.2022) அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.