
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் யாமினி. இவர் தனது 10 வயதுக் குழந்தை சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக இன்று (18.06.2025) காலை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அதன்படி பேப்பர் மில் சாலையில் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பெரம்பூர் வீனஸ் அருகே சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று வந்தது. இந்த லாரி யாமினி சென்று கொண்ட இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதன் காரணமாகச் சிறுமி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முறையாகப் பாதுகாப்புப் பணி செய்யத் தவறிய 2 காவல் அதிகாரிகள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பீக் அவர்ஸ் என்று சொல்லப்படும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலான நேரத்தில் கனரக வாகனங்கள் சாலையில் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்ததன் காரணமாக முறையாகப் பணி செய்யாத காரணத்தினால் அப்பகுதி ஆய்வாளர் மீதும், இந்த பணியைக் கண்காணிக்கத் தவறிய உதவி ஆணையர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணியை பணியிடை நீக்கம் செய்தும், உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான விசாரணை நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.