Skip to main content

திமுக தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்த  எ.வ.வேலு!

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
v


திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு ஆகஸ்ட் 14ந்தேதி திமுக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற துவங்கியுள்ளது. 


திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், 16.08.2018 ந்தேதி  காலை 11.00மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் செயற்குழுகூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ முன்னிலை வகித்தனர். கலைஞர் மறைவிற்கு எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


மாநில செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ பேசினார். அதன்பின்னர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டது.

 

v

தீர்மானம் : 1

ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழனத்தின் தனிப்பெருந்தலைவர், தமிழாய்ந்த முத்தமிழ் அறிஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டு தலைவர் திராவிட பேரியகத்தின் முதுபெருந்தலைவர் போட்டியிட்ட 13 பொதுதேர்தல்களிலும் தோல்வியே காணாத சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், 19ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சர், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழக இருக்கட்டும் என்று 14வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, கல்லக்குடி பெயர் மாற்ற தண்டவாளம் தலை வைத்து, மொழிப்போரில் தமிழுக்காக தனிமைச் சிறை அனுபவித்து, தமிழ் வாழ தமிழர்  வாழ, தளராமல் உழைத்த தலைவர், உலகத்து தமிழர்களில் ஒருவருக்கு கொடுமையென்றால், உடனே குரல் கொடுத்தது உரிமை காத்து மானம் காத்த தலைவர், அரசண்ட காலத்தில் விவசாயி, தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர் அனைத்து நிலை மக்களுக்கும் திட்டம் தந்து ஆதரித்த முதலமைச்சர். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலம் காத்தவர் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி கண்ட நாயகர். பெண்ணுரிமை போற்றியவர் இந்திய திருநாட்டிற்கே ஏராள முன்னோடி திட்டங்களைத்தந்தவர்.


எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், நாடகஆசிரியர், நாடக நடிகர், திரைப்பட கதை, வசன கர்த்தா, திரை இசைப்பாடல் ஆசிரியர் என தொட்ட துறை எல்லாம் முத்திரை பதித்தவர். சுயமரியாதை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என வாழ்நாள் முழுவதும் பெரியாரின் பிள்ளையாய் அண்ணாவின் தம்பியாய் திகழ்ந்தவர்.

தேசிய அரசியலில் கோலோச்சியவர், அரசியல் வாழ்க்கையில்

புயல் அடித்த போதும், பூம்பம் நிகழ்ந்த போதும்,

அலைஅடித்து சாய்ந்த போதும், ஆபத்து சூழ்ந்த போதும்,

இடர்கள் கோடி நேர்ந்த போதும், ஏமாற்றம் நிகழ்ந்த போதும்,

துரோகங்கள் தொடர்ந்த போதும், மலைஉடைந்து சரிந்த போதும்,

மனம் சலியா மாமனிதர், கழகத்தை காத்த தீரர்.


திருக்குவளை எனும் சிறிய கிராமத்தில் எளிய விவாசய குடும்பத்தில் பிறந்த உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இறுதிவரை கொள்கை வழிநின்று ஓயாமல் உழைத்த ஓய்வறியா தலைவர் தனது 95வயதில் 81 ஆண்டு கால மொழி, இனம், நாடு பகுத்தறிவு சுயமரியாதை, சமூக நீதி, என உழைத்து ஓராயிரம் ஆண்டு ஓங்கித்தவகிடந்து வாரது வந்துதித்த வரலாற்று நாயகன் இறுதியில் ஓய்வு கொடுத்து தன்னுடைய ஆருயில் அண்ணன் நம்முடைய தலைவர், பேரறிஞர் அண்ணா அவர்கள் மீளாத்துயில் கொண்டுள்ள இடத்தருகில் துயில் கொண்டுவிட்டார்.


நம்முடைய இனத்தலைவர் கலைஞர் அவர்களின புகழ் காருள்ள வரை, கதிர் நிலவு உள்ளவரை, பாருள்ளவரை கழக உடன் பிறப்புகளாகிய நாம்காத்து அவர் கண்ட காத்து கடைபிடிப்போம் நிறைவேற்றுவோம் உன உறுதிஏற்று, தலைவர் கலைஞர் அவர்களின் பிரிவால் பெரிதும் துயருற்ற கழக செயல்தலைவர் தளபதி அவர்களுக்கும்,  தலைவர் கலைஞர் அவர்களின் கோடிக்கணக்கான உடன் பிறப்புகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்தையும், தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஆழ்ந்த இதய அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் இம்மாவட் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 2


தலைவர் கலைஞர் அவர்களின், பேரிழப்புக்கு பிறகு கழகத்தைக் கட்டிக்காக்க, கழகத்தை வழிநடத்த 11/2 கோடி கழகதொண்டர்களின் ஏகோபித்த எண்ணம் நிறைவேற, கழக செயல்தலைவர் தளபதி அவர்களை திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவராக பொறுப்பெற்க இம்மாவட்ட கழகம் ஏகமனதாக முன்மொழிகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதிகாரத்தை கைப்பற்றுவேன் என திமுகவில் இருந்து நீக்கப்பட்ட  அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் ஸ்டாலினை, திமுகவின் தலைவராக்க மாவட்ட கமிட்டிகள் தீர்மானம் இயற்ற துவங்கியுள்ளன.

சார்ந்த செய்திகள்