









தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (07.03.2025) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. அதாவது சரியாக மாலை 06.24 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 06.28 மணிக்கு மக்ஃரிப் பாங்கு நடைபெற்றது. அதன்பின்னர் மக்ஃரிப் தொழுகை மாலை 06.35 மணிக்கு நடைபெற்றது. இந்த தொழுகை முடிந்ததும் அக்கட்சியின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெற்றது. இதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையே அக்கட்சியின் தலைவர் விஜய், இஸ்லாமியர்களோடு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு விஜய் வந்தார்.முன்னதாக ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் கூட்ட நெரிசல் நெரிசல் ஏற்பட்டது. மேலும் விஜய்யைக் காண ஏராளமானோர் அங்குத் திரண்டதால் அரங்கின் கதவு உடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதன் பின்னர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் நோன்பு திறந்தார். அதன் பின்னர் தொழுகையில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், “எனது அன்பான, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைப் பின்பற்றி மனிதநேயத்திற்கும் சகோதரத்திற்கும் பின்பற்றி இங்கு உள்ள அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் என்னுடைய இந்த அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டது நீங்கள் எல்லோரும் இங்கு வந்து கலந்துகொண்டதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி (THANK YOU)” எனத் தெரிவித்தார்.