Skip to main content

‘என் கடைசி ஆசை!  காக்கிச் சட்டையோடு  புதையுங்கள்!’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை !

Published on 20/03/2019 | Edited on 21/03/2019

 

 

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த ஆயுதப்படை காவலர் சரவணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

“என்ன  ஆச்சுன்னு தெரியல.. எங்க டிபார்ட்மென்ட்ல மாசத்துக்கு ஒரு சம்பவம் இப்படி நடந்துக்கிட்டிருக்கு..” வேதனையோடு கூறினார் சென்னையில் பணிபுரியும் அந்தக் காக்கி நண்பர். 

 

police



மேலும் அவர், "போன மாசம் (பிப்.03-ஆம்தேதி) கீழ்ப்பாக்கம் ஏடிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மணிகண்டன் என்ற ஆயுதப்படைக் காவலர் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அன்று தான் அவருக்குப் பிறந்த நாள்.  சக நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அவர், அதற்குப் பிறகு இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். 
 

இன்று  (20-03-2019) மாலை,  இங்கே நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சரவணன் (காவலர் எண்:51253),  தான் வைத்திருந்த எஸ்.எல்.ஆர் துப்பாக்கியின் விசையை அழுத்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.." என்றார்.
 

துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த ஆயுதப்படை காவலர் சரவணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னந்தலையைத் துளைத்த தோட்டா பின்னந்தலையை விட்டு வெளியேறியிருக்கிறது.  அதனால், கவலைக்கிடம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சரவணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம்  அருகிலுள்ள குருக்கள்நாடார் பட்டி ஆகும்.

 

police


 

இதனிடையே,  சரவணன்,  தன்  கைப்பட எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை அவரது நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். அதில்,   ‘எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. எனக்கு வாழப்பிடிக்கவில்லை‘  என்று  எழுதியிருக்கிறார். பிரதிபா, செல்வா, ருத்ரன் ஆகியோரை நல்லா படிக்க வைங்க. அம்மா, அப்பா என்ன மன்னிச்சிடுங்க.  நான் இறந்ததும் எனது காக்கி உடையைக் கழற்றாமல் அப்படியே புதையுங்கள், அல்லது எரியுங்கள்’  என்று எழுதப்பட்டுள்ளது.
 

காக்கி உடையோடு என்னைப் புதையுங்கள் என்று சரவணன் எழுதியிருக்கிறார் என்றால், இந்தத் துறையை அவர் மிகவும் நேசித்திருக்க வேண்டும். அப்புறம் ஏன் 29 வயதில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுக்க வேண்டும்?  என்ற கேள்வி எழுகிறது. உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடும்பம் நடத்திய பெண் பிரிந்து சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
tragic decision taken by  man because woman  away

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

“கலைஞர் கொடுத்த இடம்...” - கண்ணீர் வடிக்கும் மக்கள்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Officials demolished 54 houses near Tiruttani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் கலைஞர் நகர் என்ற இடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அந்தப் பகுதி கூலித் தொழிலாளர்கள் 75 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களில் வீடுகளைக் கட்டிய மக்களுக்கு, அந்தப் பகுதியில் மின் இணைப்பு, சாலை வசதி, கழுவு நீர், கால்வாய் என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 20 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ, எம்.பி., எனப் பலரிடமும் மனு கொடுத்துப் போராடியுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கப் போகிறோம் என்று ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் போர்ட் ஒன்றை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள், இந்தப் போர்டை அப்புறப்படுத்த வேண்டும். எங்களுக்கு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில், 54 வீடுகளை நாங்கள் கட்டியுள்ளோம். பட்டாக்கள் அனைத்தும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுங்கள் என்று அரக்கோணம் எம்.பி., மாவட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் என மீண்டும் பலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந்தச் சூழலில் திடீரென வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் திருத்தணி டி.எஸ்.பி.விக்னேஷ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி. புரத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர் இன்று அதிகாலை 5 மணி முதல் இந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த 54 வீடுகளையும் ஜே.சி.பி.மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். அப்போது ஜே.சி.பி மூலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்தவர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

Officials demolished 54 houses near Tiruttani

“வட்டாட்சியர் விஜயகுமார் எங்களிடம் வீட்டை இடிக்காமல் இருக்கும் ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் நாங்கள் பணம் எல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தால், வீடுகளை இடிக்க உத்தரவு போட்டுவிட்டோம் என்று எங்களிடம் நக்கலாகப் பேசினார். நாங்கள் இதனைக் கண்டித்து நீதிமன்றம் செல்வோம் என்று கூறியதற்கு, நீங்க எங்க வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள் என்று கூறி ஆபாசமாகத் திட்டினார்” எனப் பொது மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 54 வீடுகள் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபத்தில் இருக்கும் அந்தப் பகுதி மக்கள், எங்களது வீடுகளை இடித்ததால் தற்கொலை செய்துகொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வந்த திமுக பஞ்சாயத்துத் தலைவர் சத்யராஜ் என்பவரிடம், “ ஏன் இப்படிச் செய்தீர்கள். இதற்கு திமுக ஆட்சிதான் காரணம். கலைஞர் பட்டா வழங்கினார். அவரது மகன் முதல்வர் ஸ்டாலின் இடிக்க உத்தரவிட்டார். நாங்கள் கூலித் தொழிலாளிகள் இப்போது நாங்கள் எங்கே செல்வோம் என்று கண்ணீர் மல்க அந்தப் பகுதி மக்கள் முறையிட்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றத்துடன் காணப்படுகிறது.