Skip to main content

பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ரத்து செய்யும் தமிழக அரசு! தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் கண்டனம்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 Tamil Nadu government cancels leave -  Secondary School Headmasters Association condemns

 

பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ரத்து செய்யும் தமிழக அரசின் செயலுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசானது கரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நிதி நிலையை காரணம்காட்டி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை (சுமார் 18 மாதம்) அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாது என்றும், ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படாது என்றும், வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 7.9 லிருந்து 7. 1 ஆக குறைத்து அரசாணை பிறப்பித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசானது  கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் உள்ளபோது, எமது அமைப்பு முதன் முதலில் ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு வழங்குவது என முடிவு செய்து, அந்த நிதியை ஜாக்டோ - ஜியோ பேரமைப்புடன் இணைந்து ரூ 150 கோடியினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதிக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே வேளையில் பல்வேறு கடன் சுமைகளை சுமந்து கொண்டு கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் உயிரை பணையம் வைத்து இன்று வரை அரசுக்கு நற்பெயரை ஈட்டி, பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இன்று வரை களத்தில் நின்று, என்றும் பணியாற்றி வருபவர்கள் எமது ஊழியர்களே. 

மேலும் ஓர் அரசு என்பது ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய ஒரு பகுதி. ஆனால் தமிழக அரசானது எங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளை போல் கருதி பல்வேறு ஒடுக்கு முறை நடவடிக்கைகளை செய்து வருவது, "இளகின இரும்பை கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான் என்பது போலவும், "கடைந்த மோரிலே, குடைந்து வெண்ணெய் எடுப்பது போலவும்" தொடர்ந்து தாக்குதலை அரசு தொடுத்து வருகிறது. இச்செயல் எதிர்காலத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்காது என்று எமது அமைப்பு கருதுகிறது. 

மேலும் தொழிற் சங்க போராட்ட வரலாற்றில் அதிகார வர்க்கமும், சர்வாதிகார போக்கும் வென்றதாக வரலாறு இல்லை என்பதையும் எமது அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. அதே வேளையில், பேரிடர் காலங்களில் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கூடுதல் அழுத்தத்தை கொடுத்து பேரிடர் காலத்திற்கு வழங்க வேண்டிய கூடுதல் நிதியை பெறுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும். 

மேலும், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி பாக்கி பங்கு தொகையை முழுமையாக பெற்று இத்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும், கடந்த காலத்தில் சட்ட மன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்தி வழங்க தமிழக அரசானது நிதி ஒதுக்கியுள்ளதை ரத்து செய்து. அவர்களின் ஊதியத்தை பழைய நிலையிலேயே தொடர செய்து, இக்கூடுதல் நிதியை போர்க்கால அடிப்படையில் இத்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும். 

மேலும் பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வத்தில் பேரிடர் நிதிக்காக 5 சதவீதத்தை வசூலிப்பது மட்டுமல்லாமல், இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இதிலிருந்து வரும் நிதியை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி , ஈட்டிய விடுப்பு ஊதிய தொகையானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரி கணக்கு மற்றும் சந்தையில் வாங்கப்படும் பொருட்கள் மூலம் அரசுக்கு சுழற்சி முறையில் பற்று வைக்கப்பட்டு, மீண்டும் சந்தையில் பொருளாக மாற்றப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு தீர்வாகாது மாறாக கூடுதல் நிதி நெருக்கடியை  ஏற்படுத்தும் என்பதே உண்மையான பொருளாதார கூற்று என்பதை புரிந்து கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதியம், மற்றும் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு அரசாணைகளை ரத்து செய்து மீண்டும் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்று வழங்கிட தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.


                     

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.