Skip to main content

சாலை ஆறானது.. பள்ளி செல்ல முடியாத மாணவர்கள்.. வேலைக்கு போக முடியாத மக்கள்!-நீலகிரி அவலம்

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

 

நீலகிரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட கனமழைக்கு மலைகள் சரிந்து வீடுகள், உடமைகள் சேதமடைந்து அன்றாடம் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருக்கிறார்கள் மக்கள். பழங்குயின மக்களுக்கு பாத்திரங்கள் கூட எஞ்சவில்லை. நிவாரணம் கொடுக்க வரும் தன்னார்வலர்களிடம் எங்களுக்கு பசியை போக்க அரிசி கொடுக்குறீங்க ஆனா அதை சமைக்க பாத்திரம் இல்லை என்று வேதனையுடன் சொல்வதை தன்னார்வலர்கள் மனம்கனக்க கேட்டு வந்து பாத்திரங்களோடு சென்றனர். சில பழங்குடியினப் பெண்கள் தங்களுக்கு தையல் போன்ற தொழிற்பயிற்சி வேண்டும் என்று கேட்க அதையும் செய்வதாக தன்னார்வலர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இப்படி ஒவ்வொரு கிராமமாக சாலை இல்லாத இடங்களுக்கெல்லாம் தலையில் சுமந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருவதடன் அவர்களின் துயரங்களையும் நேரில் பார்த்து ஆறுதல் சொல்லி வருகிறார்கள் தன்னார்வலர்கள்.

இதில் ஒரு குழவினர் ஒவேலி பார்வர்டு காவல்நிலையத்தின் கீழே செல்லும் சாலையில் நிவாரணப் பொருட்களுடன் பயணித்தனர். அந்த சாலை பாண்டிநகர் பகுதிக்கு சென்றது. சுமார் 2 கி மீ தூரம் நடந்தனர் ஆனால் பாதி வழியில் சாலையை காணவில்லை. சாலை இருந்த இடத்தில் ஆறு ஓடியது. மிகுந்த சிரமங்களுக்கிடையே பாண்டி நகரில் உள்ள 20 வீடுகளுக்கும் செல்ல முடியாவிட்டாலும் பல வீடுகளுக்கு சென்றனர். கையில் இருந்ததை கொடுத்தனர்.  அப்போது அந்த இளைஞர்களிடம். 

இங்கிருந்து என்ன வாங்க வேண்டியிருந்தாலும் பார்வர்டுதான் போகனும், எங்கள் குழந்தைகள் எல்லாரும் பார்வர்டு போய்தான் படிக்கனும். ஆனா மழையால் சுமார் 200 சாலையை காணும் சாலையில் இப்ப தண்ணீர் ஓடுது, பாறைகள் கிடக்கிறது. அதனால எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு போகமுடியல. நாங்களும் வேலைக்கு போக முடியாமல் முடங்கி கிடக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு அ.ராஜா எம் பி வந்தார் சாலையை சீரமைக்கிறதா சொன்னார் எந்த வேலையும் நடக்கல. சில அதிகாரிகளும் வந்தார்கள் போனார்கள் ஆனால் சாலைதான் வரல.உடனடியாக சாலையை சீரமைக்க முடியாதுதான் அதனால உடைப்புகளுக்கு அருகில் மரப்பாலமோ, எஸ்டேட்ல மாற்று பாதையோ உடனடியாக அமைத்துக் கொடுத்தால்தான் நாங்கள் வெளியே வரமுடியும் என்றனர்.

பாண்டி நகரில் சாலையில்லாமல் சிறைபட்டுள்ள மக்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி கொடுங்கள் என்று தன்னார்வ இளைஞர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக எம்பி அங்கே போனாரே என்பதற்காக அந்த பகுதியை புறக்கணிக்காமல் மக்களின் நிலையை மனதில் கொண்டு மாற்று வழி ஏற்படுத்தினால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் மக்கள் வேலைகளுக்கும் செல்வார்கள். அதிகாரிகள் கவனிப்பார்கள் மாற்று வழி ஏற்பாடு செய்வார்கள் என நம்புவோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.