Skip to main content

முதலாளி கொலை; வடமாநில இளைஞர்கள் கைது

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

salem owners incident two north indians arrested

 

சேலம் மாவட்டம்  தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே  குமரன் டிரேடர்ஸ் என்ற இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்களாக பொம்மிடி அருகே உள்ள குறிஞ்சிபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து  கூட்டாக கடை நடத்தி வருகின்றனர். கடையில் வேலை செய்வதற்காக பீகார் மாநிலம் பேகுசிரா மாவட்டத்தைச் சேர்ந்த சீப் சந்திர யாதவ் மகன் சோபித்( வயது 18) மற்றும் குல்சந்த் சாத் மகன் பெர்ஜி( வயது 15) என்ற இரண்டு இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் வேலை செய்து வந்தனர்.

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கடையில் நடைபெற்ற வியாபாரத்தின் மூலம் வந்த மொத்த பணம் சுமார் 4 லட்சத்தை வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக இரண்டு உரிமையாளர்களும் கொண்டு செல்ல முற்பட்டனர். இதையறிந்த வடமாநில இளைஞர்கள் இருவரும் உரிமையாளர்களைத் தனித்தனியாக நிறுத்தி வைத்து அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர் இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞர் சந்தோஷை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

 

இதைக் கண்ட பிரேம்குமார் உடனே சந்தோஷை காப்பாற்ற சென்ற பொழுது அவரை கொலை செய்ய அவர் அருகில் இருந்து மற்றொரு இளைஞனும் பிரேம்குமாரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளான். பின்பு பிரேம்குமார் கல்லால் அந்த இளைஞரை தாக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது அவரை தாக்காமல் அந்த இளைஞர் விட்டு விட்டார். ஆனால், சந்தோஷ் உடலில் கத்திக் குத்து அதிகமாக இருந்தால் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட  அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்தோஷை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சந்தோஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

வடமாநில இளைஞர்கள் இருவரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் வடமாநில இளைஞர்களுக்கு உரிமையாளர்கள் சம்பளம் வழங்காமல் இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும், உரிமையாளர்கள் தரப்பில் வடமாநில இளைஞர்களுக்கு முறையாக சம்பளம் கொடுத்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர், சந்தேகமடைந்த போலீசார் வடமாநில இளைஞர்கள் கடந்த ஒருவாரமாக வசூலான பணத்தை கொள்ளை அடிப்பதற்காக கொலை செய்து இருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்