
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை கே. தவசிலிங்கம், தனது 93வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருத்தங்கல்லில் உள்ள பாலாஜி நகர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தனது மகன் ராஜேந்திர பாலாஜி 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலையிலும் கூட, தவசிலிங்கம் துளியும் ஆடம்பரத்தை விரும்பாத எளிய மனிதராக கட்சித் தொண்டர்களிடம் பழகி வந்தவர் என்பதால், அவருடைய மறைவு அதிமுகவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் கூற முடியாத நிலையில், ராஜேந்திர பாலாஜியை தொடர்புகொண்டு பேசியதோடு, ‘பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய இழப்பாகும்.’ எனக் குறிப்பிட்டு அதிமுக சார்பில் இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.