Skip to main content

பாமக பொதுக்குழு கூட்டம்- அன்புமணி அறிவிப்பு

Published on 10/06/2025 | Edited on 10/06/2025
PMK General Committee Meeting - Anbumani's Announcement

பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலுக்கு பின் கடந்த 05/06/2025 அன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.

அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க குருமூர்த்தி மூலம் பேசப்பட்டதாக யூகங்கள் கிளம்பின. அதேநேரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி ராமதாஸும், அன்புமணியும் இணைந்து விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட ஒருவரான வழக்கறிஞர் பாலுவை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். பாமகவில் சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து பாலுவை நீக்கியுள்ள ராமதாஸ், பாலுவிற்கு பதிலாக வி.எஸ்.கோபு என்ற வழக்கறிஞரை சமூகநீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமித்து அறிவித்துள்ளார். ஏற்கனவே அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வரும் நிலையில் இந்த தகவலும் பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் அன்புமணி தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

சார்ந்த செய்திகள்