Skip to main content

ஆன்லைன் ஆப்பில் கடன்; மாணவருக்கு நேர்ந்த சோகம்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

namakkal engineering student online app loan incident

 

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்து விட்டு இறுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளார். இவர் ஆன்லைன் செயலி மூலம் தன்னுடைய பணத்தேவைக்காக 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் அவர் கடன் வாங்கிய நிலையில் தன்னிச்சையாக அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியும் சமீபத்தில் முடிந்துள்ளது.

 

இதையடுத்து கடன் கொடுத்த நிறுவனம் பணத்தைத் திருப்பிக் கேட்டு லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளது. இதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனம் லோகேஷ்வரனின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர் கடன் வாங்கிய விவரங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், பணத்தை திருப்பிச் செலுத்தவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் தான் தனது மகன் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கியது பற்றி தனது பெற்றோருக்கு தெரிய வந்ததை அறிந்த லோகேஷ்வரன் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து தனியாக வீட்டில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.