Skip to main content

ரேஷனில் விலையில்லா அரிசி இனி கிடைக்குமா? முத்தரசன் சந்தேகம்!!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

உணவுப்பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தொடர்ந்து விலையில்லா அரிசி கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 
 

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை (அக். 17) நடந்தது. பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன், சீனிவாசன், தனகோட்டி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழை மக்கள் விலையில்லா அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் பட்சத்தில், மக்களுக்கு தொடர்ந்து விலையில்லா அரிசி கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

FREE RATION RICE FURTHER DAYS MAY BE DEMAND CPI PARTY MUTHARASAN SPEECH


மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறுதொழில் முதல் பெருந்தொழில் வரை பாதிப்படைந்துள்ளது. பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர். நீட் தேர்வு பயிற்சி மையங்களில் நடக்கும் முறைகேடுகள் உயர் அதிகாரிகள் அனுமதியில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களை தரம் தாழ்த்திப் பேசுவதும், தனிநபர் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயலை பாஜக அணியில் இருப்பவர்கள் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. 


தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளதாக முதல்வர் கூறி வருகிறார். தூர்வாரிய குளத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம். அப்போது அதுபோன்ற திட்டங்களே நடக்கவில்லை தெரிய வந்தது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.  தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி கவலைப்படாமல் தமிழக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 


கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கொள்ளையர்கள் அச்சமின்றி கொள்ளையடித்து வருகின்றனர். ராஜிவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற பேசும்போது, அவர் உணர்ச்சிவசப்படக்கூடாது. இது 7 பேரின் விடுதலைக்கு இடையூறாக அமைந்து விடும். நடக்க இருக்கின்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. பாஜக ஆட்சியில் இருக்கும் வரை ப.சிதம்பரத்தை வெளியே விடாமல் அவரை மீண்டும் கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சியாக பாஜக செயல்படுவது மட்டுமில்லாது, சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறது. இவ்வாறு முத்தரசன் கூறினார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.