
தமிழகத்தில் அண்மையாகவே பல்வேறு துறைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள், முக்கிய புள்ளிகள், பணியாளர்கள் என பலரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
சோதனைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளை அடுத்து மீண்டும் அமலாக்கத்துறையின் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் சென்னை மண்டலத்தின் முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக டாஸ்மாக் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குநராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் வருமான வரித்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கனிமவளக் கொள்ளை வழக்கு; டாஸ்மாக் வழக்கு; அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆனந்திற்கு எதிரான வழக்கு; முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு; செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அதிரடியான சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.