Skip to main content

விஷம் அருந்திய காதலன் : தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட காதலி

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
Suicide




திருமணம் செய்துகொண்ட காதலன் விஷமருந்தி தற்கொலை செய்து உயிரிழந்ததை தொடர்ந்து காதலியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வெண்ண முத்துப்பேட்டையை சேர்ந்த பழனியப்பன் மகன் பார்த்திபன். வயது 24. இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

 

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கிலி முத்து என்பவரது மகள் அனுப்பிரியாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விஷயம் இருவரும் வீட்டிற்கு தெரிய வரவே அடிக்கடி இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அனுப்பிரியாவை தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வேம்படியில் அவரது அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 

 

இந்நிலையில் கடந்த 18ம் தேதி பார்த்திபன் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அனுபிரியாவை சந்தித்துள்ளார். அப்போது அனுபிரியாவுக்கும் பார்த்திபனுக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றது. 

 

இந்த தகவலை அறிந்த பார்த்திபன் தாயார் கவிதாவும் அவரது உறவினர்களும் அங்கு சென்றனர். அங்கு பார்த்திபனும் திருமணத்தில் மாலை மாற்றிக்கொண்டு மஞ்சள் கிழங்கு தாலி கட்டி திருமணம் நடைபெற்றது. இதனை பார்த்திபன் தாயாரும் உறவினரும் ஏற்க மறுத்து அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. 

 

அப்போது பார்த்திபனை அவரது தாயார் அழைத்தபோது, அவரை விட பெண் வீட்டார் தரப்பினர் மறுத்ததாகவும், நாளை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். திடீர் திருமணம் நடைபெற்ற நிலையில் மறுநாள் கோவில் அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்த பார்த்திபனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் 

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தனது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது எனவும் தனது மகனை கடத்தி கட்டாய திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி கொன்று விட்டனர் எனவும் அவரது தாயார் புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Suicide



இதற்கிடையில் கடந்த 23ஆம் தேதி பார்த்திபன் உடற்கூறு ஆய்வு செய்து அவரது சொந்த ஊரான முத்துப்பட்டி கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. 



அப்போது சவ ஊர்வலம் சென்றபோது பார்த்திபன் சாவிற்கு காரணம் எனக் கருதி பெண் வீட்டு உறவினர் சக்திவேல் என்பவரது வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். பார்த்திபன் உறவினர் தனது வீட்டை அடித்து நொறுக்கி ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பார்த்திபன் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பெண் வீட்டு உறவினர் 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 


 

காதலித்து கரம்பிடித்த கணவன் தன்னுடன் ஒரு நாள் கூட வாழாமல் தற்கொலை செய்து கொண்டதால், காதல் கணவனை நினைத்து மனவேதனையில் இருந்த அனுப்பிரியா தனது சொந்த ஊரில் மதியம் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் அவர் ஓட்டு வீட்டில் உத்தரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்குள் சென்ற அனுப்பிரியா வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி கையில் பார்த்திபனின் போட்டோவுடன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் செய்து கொண்ட காதலன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து காதலியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்