
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்று (19-05-25) காலை முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் நாளை (20-05-25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (20-05-25) கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு இடங்களில் மழை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிங்கராஜபுரம், முறுக்கோடை, வருசநாடு, வாலிபாறை உள்ளிட்ட மலை கிராம பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழையானது பொழிந்து வருகிறது. பல இடங்களில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.