Skip to main content

கஜா நினைவு தினம்... அனைத்துக் கட்சி பேரணி!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

கஜா புயலின் கோரதாண்டம் முடிந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அதிலிருந்து இன்றும் யாரும் மீளவில்லை. மத்திய, மாநில அரசுகள் செய்வதாக சொன்னதையும் செய்யவில்லை.
 

இந்த நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் திக்.. திக்.. நாட்களாகவே பார்க்கிறார்கள். கஜா வுக்கு பிறகு புயல் என்ற வார்த்தையை கேட்டாலே அதிர்ச்சியாகிறார்கள் மக்கள். 1952, காலக்கட்டத்தில் இரண்டு புயல்கள் வந்து இதே போல மரங்களையும், மக்களையும், வீடுகள், ரயில் தண்டவாளங்கள் வரை அத்தனையும் அழித்துவிட்டுப் போனதை.. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி நடேசக் கோனார் என்ற நாட்டுப்புறப் பாடகர் அழகாக பதிவு செய்திருந்ததை தற்போது நினைத்துப்  பார்க்கிறார்கள். அப்போதைய அதே பாதிப்புகள் தான் தற்போதும் நடந்துள்ளது என்பதை அந்த பாடல் வரிகளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது.
 

 Gaja Memorial Day ... All Party Rally!

 

கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சில மணி நேரத்தில் அழித்துவிட்டது. அதை நினைத்து நினைத்து இன்றளவும் விவசாயிகள் அதிர்ச்சியடைகிறார்கள்.
 

இந்த நிலையில் தான் ஆலங்குடியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் கஜா புயல் ஓராண்டு நினைவு.. அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது.. கஜா புயல் தாக்கி விவசாயிகள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் இழந்தது என்பது கணக்கிடமுடியாத இழப்பு. 30 வருடங்களின் வளர்ச்சி பின்நோக்கி சென்றுவிட்டது. அந்த மக்களை மீண்டும் கை தூக்கி விடவேண்டிய கடமை அரசாங்கங்களுக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நிவாரணம் கேட்கவே பல போராட்டங்களை நடத்தி அதன் பிறகு பெற வேண்டி இருந்தது. நிவாரணம் கொடு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராட தூண்டிய அரசாங்கம் உரிமையை கேட்டதால் சாலை மறியல் செய்தார்கள், மக்களுக்கு இடையூறு செய்தார்கள், பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தினார்கள்.

எத்தனை போராட்டங்கள் நடத்தியும் கூட எதையும் பெற முடியவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களே ஓய்ந்து போனார்கள்.
சரி அவர்கள் சொன்னதையாவது செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. புயலில் வீடுகளை இழந்த மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்கள். ஒரு வரும் ஆகிவிட்டது ஒரு வீடு கூட கட்டப்படவில்லை.
 

ராணுவக் கப்பலில் தென்னங்கன்றுகள் கொண்டு வந்து கொடுப்போம் என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் சொல்லிவிட்டு போனதோடு அவரும் வரவில்லை. அவர் அனுப்பிய தென்னங்கன்றுகளும் வரவில்லை.


 

 Gaja Memorial Day ... All Party Rally!

 

தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், செம்மரம், பயிர்கள் என்று பாதிக்கப்பட்ட அனைத்திற்கு கணக்கெடுத்து இழப்பீடு தருவதாக சொன்னார்கள். தென்னைக்கு கொடுத்த 1100 அந்த மரத்தை வெட்டி வெளியேற்றக் கூட போதவில்லை. மற்ற மரங்களுக்கு அடங்கலில் இல்லை. சரியான கணக்கு இல்லை என்று சொல்லி கொடுக்கவில்லை. தென்னைக்கும் பதிவு இல்லை என்று பாதிக்கும் மேல் கொடுக்கவில்லை.
 

அரயப்பட்டியில் புயலில் சாய்ந்த மின்கம்பங்களில் இருந்து ஒரு மாதத்திற்கு பிறகு மின்கம்பிகளில் மின்சாரம் செல்வதை அறியாமல் மிதித்து உயிர்விட்ட இருவருக்கு புயல் நிவாரணம் கொடுப்பதாக பொறுப்பான மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மக்களிடம் எழுதிக் கொடுத்துவிட்டு சடலங்களை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்தச் சென்றார்கள். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கணேசும், அமைச்சர் வியபாஸ்கரும் புயல் நிவாரணம் கிடைக்க உதவுவதாக சொல்லி அமைச்சர் தலா ஒரு லட்சம் நிதி கொடுத்து அஞ்சலியும் செலுத்திவிட்டு போனார். ஒரு வருடம் முடிந்துவிட்டது புயல் நிவாரணம் கிடைத்தபாடில்லை. இதற்காக மக்களோடு சேர்ந்து போராடிய என்மீது பல வழக்குகளை போட்டுள்ளனர்.
 

இப்படி அரசாங்கத்தி்ன், அதிகாரிகளின், அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டார்கள். இன்று நினைவு தினம் அமைதிப் பேரணி நடத்தினோம். அடுத்து தொகுதி மக்களை திரட்டி சொன்னதை செய்..! நிவாரணம் கொடு..! என்று விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.