Skip to main content

வங்கி கொள்ளையர்களை தப்ப விட்டவர்கள் எல்லாம் தேச பக்தர்களா? ஸ்டாலின் அதிரடி தாக்கு!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை கொள்ளை அடித்தவர்களை வெளிநாட்டிற்கு தப்ப விட்டவர்கள் எல்லாம் தேச பக்தர்களா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

s


திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 


தனி மனிதர்களை வாழ்த்தும்போது, 'நூறாண்டு காலம் வாழ்க!' என்று வாழ்த்துவார்கள். ஆனால், திராவிட இயக்கத்தை வாழ்த்துவது என்றால், 'இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்,' என்றுதான் வாழ்த்த வேண்டும். இந்த இயக்கம், நம் சமுதாயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது. 100 ராமசாமிகள் ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லி இருக்கிறார். நம் நாட்டில் படிந்துள்ள அழுக்கு, 2000 ஆண்டு அழுக்கு. அந்த அழுக்கை சில ஆண்டுகளில் துடைத்துவிட முடியாது.

 


அதற்காகத்தான் தந்தை பெரியார், ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்றார். எனவே திராவிடர் கழகத்தின் பணி ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையானது. தந்தை பெரியார், தன்னுடைய 90வது வயதில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய எழுதிய எழுத்தைப் படிக்கும்போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டு, சிறுநீர் கழிக்கவே அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை எல்லாம் கடிதத்தில் எழுதி இருந்தார். பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விடப்போவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் அதன்பிறகுதான் அவர் தமிழ்நாட்டையே சுற்றிச்சுற்றி வந்தார். ஏராளமான கூட்டங்களில் பேசினார். மாநாடுகளில் பங்கேற்றார். போராட்டங்கள், மறியல்களில் கலந்து கொண்டார். 


தந்தை பெரியார் தன்னுடைய 90வது வயதில் 141 நாள்கள் அலைந்து 180 இடங்களில் பேசினார். 91 வயதில் 131 நாள்கள் அலைந்து 150 இடங்களில் பேசினார். 92 வயதில் 175 நாள்கள் பயணம் செய்து 244 கூட்டங்களில் பேசினார். 93வது வயதில் 183 நாள்கள் அலைந்து 249 இடங்களில் பேசினார். 94வது வயதில் 177 நாள்கள் பயணம் செய்து 229 கூட்டங்களில் பேசினார். 95வது வயதில் அவர் வாழ்ந்த நாள்கள் மொத்தம் 98. அதில் பயணம் செய்த நாள்கள் 35. பேசிய கூட்டங்கள் 42.

 

st


உலகில் இப்படி ஒரு தலைவன் எந்த இனத்திற்கும், எந்த நாட்டிற்கும் வாய்த்தது கிடையாது. அதனால்தான் அண்ணா அவரைப் பற்றி குறிப்பிடும்போது, பெரியார் ஒரு மனிதர் அல்ல. அவர் ஒரு சகாப்தம். அவர் ஒரு காலக்கட்டம். அவர் ஒரு திருப்பம் என்று சொன்னார்கள்.  


இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி உரிமையை நாம் பெற்றோம். அந்த உரிமையை தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் நிலைநிறுத்திக் காட்டி இருக்கிறோமா இல்லையா? அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இட ஒதுக்கீடு உரிமையை நிலை நாட்டினோம். சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். நம் தாய்நாடான தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியிருக்கிறோம். இருமொழி கொள்கையை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறோம்.


சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம், சமூக சீர்திருத்தத்துறை உருவாக்கம், அருந்ததியினர், சிறுபான்மையினர் நலன், மாநில சுயாட்சிக் கொள்கை என பல சாதனைகளைப் புரிந்திருக்கிறோம். தமிழுக்காக வாதாடினோம். தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து வாதாடும் நிலையில் இருக்கிறோம் என்றால் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரால்தான் இவை எல்லாம் சாத்தியமானது. இந்த சாதனைகள் எல்லாம் திராவிடர் கழகத்தின் சாதனைகள் என்றும் சொல்வேன். 


திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றோடு (ஆக. 27) ஓராண்டு நிறைவடைகிறது. நம்மை ஆளாக்கிய கலைஞர் உருவச்சிலையை தாரமங்கலம் பகுதியில் திறந்து வைத்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். இப்படி ஒரு பொருத்தம் கிடைக்குமா? இதை திட்டமிட்டு நடத்தவில்லை.


திராவிடர் கழகமும், திமுகவும் ஒரு மரத்துக் கனிகள். இப்போது நாம் ஒன்றாக இருக்கிறோம். திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள். ஒருதாய் மக்கள். திராவிட இயக்கம் என்பது முன்பை விட இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் எப்போது உருவானதோ அப்போதே அதை வீழ்த்துவோம் என்று சொல்லக்கூடியவர்களும் உருவாகிவிட்டார்கள். அதனால்தான் திராவிட இயக்கங்களை களங்கப்படுத்தும் முயற்சிகளை நம் எதிரிகள் இன்னும் விடவில்லை. நம்மைப்பார்த்து சிலர் தேச விரோதிகள் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்கிறார்கள். நம்மை அப்படிச் சொல்லிவிட்டு அவர்கள்தான் இன்று நாட்டை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தைப் பிரித்து கொண்டிருக்கிறார்கள்.


சர்வாதிகாரத்தை எதிர்த்தாலே தேச விரோதிகளா? நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் ஏஜன்டுகள். மக்களின் ஏஜன்டுகள். தமிழ்நாட்டின் உடைய, தமிழ் மக்களுடைய ஏஜன்டுகள். ஜனநாயகத்திற்கு எங்கே ஆபத்து வந்தாலும் அதை முதலில் தட்டிக்கேட்போம். எப்படிப்பட்ட அடக்குமுறைகள், என்ன கொடுமைகள்... எதுவந்தாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அதை முறியடிப்பதுதான் முதல் வேலை என்ற உறுதியோடு கடமையாற்றுவோம்.


காஷ்மீரின் ஜனநாயகத்தை காப்பாற்ற டெல்லியில் 14 கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதைப் பொறுக்க முடியாதவர்கள் திசை திருப்பிப் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். ஜனநாயகப்படி நடந்தால் அது தேச விரோதமா? அதை வைத்துக்கெண்டு தமிழகத்தை பழி வாங்குவதா? தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களை வழங்காமல் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு மூலம் பழி வாங்குகின்றனர். விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை கொண்டு வந்து பழி வாங்குகின்றனர். அதையெல்லாம் அதிமுக ஆட்சி அடிபணிந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. 


ஜனநாயகத்தின் குரல்வளை எங்கே நெரிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகத்தான் தந்தை பெரியார், திராவிடர் கழகத்தைத் தொடங்கி வைத்தார்கள். அதற்காகத்தான் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார்கள். டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பாற்றி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், 'கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் திமுக இப்போது செய்து கொண்டிருக்கிறது,' என்று பெருமையோடு பேசவில்லையா? 


திமுக, மாநிலக் கட்சியாக இருந்தாலும், அகில இந்தியாவுக்கு எது சரியான அரசியலோ அதைத்தான் தொடர்ந்து செய்வோம். சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். இனிமேல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன பயன்? என்கிறார்கள். 'எந்த ஒரு போராட்டமும் வெற்றி அடைந்ததா? தோல்வி அடைந்ததா? என்பது முக்கியமல்ல. நாம் நம் கடமையைச் செய்திருக்கிறோமா? என்பதுதான் முக்கியம்,' என்று தந்தை பெரியார் சொல்லி இருக்கிறார். அதைத்தானே திமுக செய்திருக்கிறது.  


இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய சராசரி மனிதர்கள் அதை உணர்ந்து இருக்கிறார்கள். வாகன விற்பனை 31 சதவீதம் குறைந்து விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட மோட்டார் தொழிற்சாலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நான்கு மாதங்களில் 3.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். 


இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்தால் பத்து லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என சொல்கின்றனர். இந்திய பொருளாதாரம் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது எனறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெளிவாக சொல்லி இருக்கிறார். பின்னலாடை துறையில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். 90 ஆண்டுகள் கொடிகட்டி பறந்த ஒரு பிஸ்கட் நிறுவனம், 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருக்கிறது. 


இவை அனைத்தையும் மறைப்பதற்காகத்தான் காஷ்மீர் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோலதான் சிதம்பரம் கைது என்ற நாடகத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இப்படியெல்லாம் செய்தால்தான் அரசியல்வாதிகள் இவற்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார்கள். பொருளாதாரச் சீரழிவைப் பற்றி மறந்து விடுவார்கள் என்று திட்டமிட்டு செய்கிறார்கள். நிர்மலா சீதாராமன் அவசரம் அவசரமாக பேட்டி கொடுத்தார்.

 

நாடு அதலபாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்களை வெளிநாட்டிற்கு தப்பவிட்டுவிட்டு அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் தேச பக்தர்களா? இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லும் நாம் தேச விரோதிகளா? அதனால்தான், 'இது ஜனநாயகம் அல்ல; பணநாயகம்' என்று தந்தை பெரியார் சொன்னார்.  


தந்தை பெரியார் இறந்தார்... மறைந்தார் என்று சொல்லாமல் அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டார் என்று சொல்ல வேண்டும் என்று கலைஞர் குறிப்பிடுவார். அத்தோடு அவர் நின்றுவிடவில்லை. பெரியார் முடித்துக்கொண்ட பயணத்தை நாம் தொடர்வோம் என்றும் எழுதினார். அவர் சொன்னதுபோலவே திராவிடர் கழகத்தோடு இணைந்து நாம், தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒருங்கிணைந்து போராடுவோம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !