
தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் பிறந்த நாள் இன்று கட்சியினரால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞரின் பிறந்தநாள் வணக்க செய்தியை 'எக்ஸ்' வலைத்தளத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அந்த பதிவில், 'இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
கடந்த 01/06/2025 அன்று மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்திருந்தார். அதேபோல் ராஜ்யசபா தேர்தலில் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடும் என்ற அறிவிப்பை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி வெளியிட்டிருந்த நிலையில் தேமுதிக தனது கூட்டணி குறித்த அறிவிப்பை ஜனவரியில் தான் தெரிவிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.