Skip to main content

கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக 5 லட்சம் ரூபாய் மோசடி; அதிமுக நிர்வாகி மீது புகார்!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Fraud of 5 lakh rupees by claiming to get a job in a co-operative bank; Complaint against ADMK member

 

சேலத்தில், கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது இருவர் தனித்தனி புகார் அளித்துள்ளனர்.

 

சேலம் அருகே உள்ள தாதனூரைச் சேர்ந்தவர் குமார் (34). தள்ளுவண்டியில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது; அதிமுகவைச் சேர்ந்த அரியானூர் பழனிசாமி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பள்ளப்பட்டியில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர் என்னிடம், கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். 

 

அதையடுத்து, சேலம் புது ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த மாரியப்பன் மூலமாக அரியானூர் பழனிசாமியிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. இதற்கிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு, கொரோனாவால் மாரியப்பன் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மகன் கண்ணனை அழைத்துக்கொண்டு அரியானூர் பழனிசாமியை சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாகக் கூறினார். ஆனால் அதன்பிறகும் பணம் தராமல் இழுத்தடித்து வந்தார். 

 

மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் சென்று கேட்டபோது, இனிமேல் பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார். அவரிடம் இருந்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். 

 

மற்றொரு புகார்: 


சேலம் மாமாங்கம் தில்லை நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (35). இவரும், மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சேலம் புது ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த மாரியப்பன் என்பவர், கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்.

 

இதையடுத்து அவர் என்னை அதிமுக பிரமுகர் அரியானூர் பழனிசாமியிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் நேரடியாக ஒரு லட்சமும், மாரியப்பன் மூலமாக 2 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். ஆனால் அரியானூர் பழனிசாமி எனக்கு வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பித் தரவில்லை.  பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் கடன் வாங்கிக் கொடுத்த பணத்திற்கு வட்டி செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்து இருந்தார். 

 

இவ்விரு புகார்கள் குறித்தும் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் சிக்கியுள்ள அரியானூர் பழனிசாமி, அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக உள்ளார்.

 

கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, அரியானூர் பழனிசாமி மீது கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பும் சிலர் புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.