
கரோனா ஊரடங்கு காரணமாக ஆக்கிரமிப்பை அகற்றவும், சட்ட விரோத கட்டுமானங்களை இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஜூன் 1-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள நீதிமன்றங்களின் பணிகளை மூன்று வாரங்களுக்கு நிறுத்திவைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுகளுக்கு, காலாவதியான நிலை ஏற்பட்டதால், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவின்படி, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த விசாரனையின்போது, அந்த இடைக்கால உத்தரவுகளை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த இடைக்கால உத்தரவுகளை ஜூன் 1-ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இடத்தைக் காலி செய்யவும், கட்டிடங்கள் இடிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தி இருக்காவிட்டால், ஜூன் 1-ஆம் தேதி வரை அந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், இடைக்கால ஜாமீன் உத்தரவுகளையும், பரோல் உத்தரவுகளையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.