Skip to main content

நேர்மையான அதிகாரிகளுக்கு செக்! எடப்பாடி ஆட்சியில் தொடரும் கொடுமை!!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

நேர்மையான அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவது அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தொடர்ந்து வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
 


துக்ளக் தர்பார் நடத்தி வரும் அதிமுக, கடந்த 2011ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தங்களை தேர்ந்தெடுத்த மக்களை மட்டுமின்றி, நேர்மையாக பணியாற்றி வரும் அதிகாரிகளையும் பாடாய் படுத்தி வருகிறது. கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வரையிலும், ஆளுங்கட்சியினரின் அராஜக நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள். அதேநேரம், ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டும் அதிகாரிகளுக்கு இந்த அரசு எப்போதும் ரத்தினக் கம்பளம் விரிக்கத் தவறியதில்லை. 



அதிமுக ஆட்சியின் ஊழலுக்குத் துணை போகாததால், அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த அழுத்தத்தால், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விரும்பத்தகாத நிகழ்வுகளும் இந்த ஆட்சியில் நடந்துள்ளன.

 

ceo-ganeshmoorthi-salem



இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான கணேஷ்மூர்த்தி, முதல்வரின் மாவட்டத்தில் பொறுப்பேற்று பதினொரு மாதத்திற்குள்ளாகவே திடீரென்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். விடிந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிலையில், ஜூன் 7ம் தேதியன்று இரவோடு இரவாக, எவ்வித காரணமும் சொல்லாமல் அவரை காத்திருப்போர் பட்டியலில் தள்ளியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. 
 


மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகளுக்கு எந்த பணியிடமும் நிரந்தரம் இல்லைதான். இடமாறுதல் என்பது அவர்களின் பணிக்காலத்தில் இயல்பான ஒன்று. ஆனால், கணேஷ்மூர்த்தியை இடமாறுதல் செய்யாமல், காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்புவது என்பது, பள்ளிக்கல்வித்துறையில் இதுவரையிலும் நடந்திராத ஒன்று.


 

 


''முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, எந்தப்பள்ளியில் ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும், மதிய உணவுக்காக அவர் எலுமிச்சை அல்லது புளி சோறு பார்சல் எடுத்துச் சென்று விடுவார். அவருடைய ஜீப்பிலேயே அமர்ந்து சாப்பிட்டுவிடக்கூடியவர். தேநீர் கொடுத்தாலும்கூட, எனக்கு தேநீர் குடிக்கும் பழக்கம் இல்லை என்று நாசூக்காக மறுத்துவிடுவார். அவருக்கு மரியாதை நிமித்தமாக போர்த்தப்படும் சால்வைகளைக்கூட, அப்பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு போர்த்திவிட்டுச் சென்று விடுவார். அந்தளவுக்கு படுசுத்தமான அதிகாரி,'' என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.

 

admk-elangovan



அவர் மீதான பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைக்கான காரணம் குறித்து ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் விசாரித்தோம். முதல்வரின் நிழல்போல் செயல்படும்,  ஜெயலலிதா பேரவை செயலாளரான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் உடனான உரசல்தான் காரணம் என்கிறார்கள்.
 


''முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்த மாவட்டத்திற்கு வந்ததில் இருந்தே ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டதே இல்லை. முதல்வர் மாவட்டத்தில் இப்படி ஒருவர், பதினொரு மாதங்கள் வரை பணியாற்றியதே பெரிய விஷயம்தான். குறிப்பாக, முதல்வருக்கு நெருக்கமான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், அவருடைய உறவினர் ஒருவருடைய பள்ளிக்கு அங்கீகாரம் கேட்டு சிபாரிசு செய்திருந்தார். 
 


ஆனால் அந்தப்பள்ளியில், அரசு விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லை. பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறைகளிடம் பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ்களும் அப்போது அந்தப்பள்ளி நிர்வாகம் பெற்றிருக்கவில்லை. இந்த நடைமுறைகளை முடிக்காமல் அங்கீகாரம் தர முடியாது என்று கணேஷ்மூர்த்தி கறாராகச் சொல்லிவிட்டார். 
 


இது தொடர்பாக இளங்கோவன் மீண்டும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் செல்போனில் பேச முயன்றபோது, அவரோ தன் உதவியாளரிடம் செல்போனைக் கொடுத்து, 'அய்யா பிஸியாக இருக்கிறார். அப்புறம் பேசச்சொன்னார்,' என்று சொல்ல வைத்திருக்கிறார். இது, இளங்கோவனை ரொம்பவே எரிச்சல் படுத்தியது. மக்களவை  தேர்தல் அறிவிப்பு வெளியான அன்று, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகளை வழங்கி விடுமாறு இளங்கோவன் கூறியுள்ளார். அதற்கும் கணேஷ்மூர்த்தி, தேர்தல் நடத்தை விதிகளைக்கூறி, லேப்டாப்புகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். இதுவும், இளங்கோவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
 


அதேபோல், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, ஒரு பிரபலமான தனியார் கிறிஸ்தவ பள்ளியில் ஒரு மாணவியை சேர்க்கக் கேட்டும், 'அந்தப்பள்ளியில் நான் சொன்னால் கேட்கமாட்டார்கள். தகுதி இருந்தால் மாணவிக்கு இடம் கிடைத்துவிடும்' என்று பெயரளவுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி நழுவிவிட்டார். 'ஆளுங்கட்சி எம்எல்ஏ சொல்லியும், ஒரு அட்மிஷன்கூட போட்டுத்தர முடியாதவர் எல்லாம் எப்படி முதல்வர் மாவட்டத்தில் வேலை பார்க்கிறாரோ' என்று அப்போதே வெங்கடாசலம் எம்எல்ஏ சலித்துக்கொண்டார்.
 


இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மே 26ம் தேதியுடன் முடிந்த நிலையில், சமயம் பார்த்து முதன்மைக்கல்வி அலுவலரை பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் காத்திருப்போர் பட்டியலில் மாற்ற வைத்து பழிவாங்கி விட்டார். அதற்கேற்றார்போல், அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய டெட் தேர்வுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை, இரவு வரை இழுத்தடித்ததில் ஆசிரியர்களுக்கும் அவர் மீது ஏகத்துக்கும் அதிருப்தி. எல்லாவற்றையும் சேர்த்து கணக்கு தீர்த்துவிட்டார்கள்,'' என்கிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.
 


முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2010ம் ஆண்டு நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியில் சேர்ந்தவர். இத்துறைக்கு அவர் வந்து மொத்தமாக 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போதுவரை ஐந்து முறை இடமாறுதல்  செய்யப்பட்டிருக்கிறார். எந்த இடத்திலும் அவர் முழுமையாக மூன்று ஆண்டுகள் பணியாற்றியதில்லை. 
 


சேலத்திற்கு வருவதற்கு முன்பு, அவர் கரூர் மாவட்டத்தில் பணியாற்றினார். அங்கு தனக்குக் கீழ் உள்ள ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின்பேரில் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் சிக்க வைத்திருக்கிறார் கணேஷ்மூர்த்தி. சேலம் வந்த பிறகும்கூட, அவரிடம் முறைத்துக்கொள்ளும் சங்க நிர்வாகிகளிடம், 'நீங்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தாலும் இல்லாவிட்டாலும்கூட, ஓராண்டுக்குள் எப்படியும் என்னை எங்கேயாவது தூக்கியடித்து  விடப்போகிறார்கள்,' என்று அடிக்கடி கூறிவந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.


 

 

chandrasekar-teacher




இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் சந்திரசேகர் நம்மிடம் பேசினார்.
 


''முதன்மைக்கல்வி அதிகாரியின் கீழ் உள்ள ஒட்டுமொத்த பணியாளர்களும் வேலை பார்த்ததாக வரலாறு இல்லை. ஆனால் அதை முறியடித்து, எல்லோரிடமும் சரியாக வேலை வாங்கினார் கணேஷ்மூர்த்தி. ஒரு சங்க பொறுப்பாளராக நாங்கள் அவரிடம் ஏதாவது சிபாரிசுக்கு சென்றாலும்கூட அதை அவர் ஏற்க மாட்டார். பள்ளி க்கல்வித்துறை இயக்குநரைக்கூட நாங்கள் எளிதில் நேரில் சந்தித்து விட முடியும். ஆனால், கணேஷ்மூர்த்தியை அத்தனை சீக்கிரத்தில் சந்திக்க முடியாது என்பது வருத்தம்தான். அரசியல்வாதிகளுக்கும் அதே நிலைதான். இதில், ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் அதிருப்தியையும் அவர் சம்பாதித்து இருந்தார். ஆனாலும், ஐஏஎஸ் அதிகாரி சகாயம்போல அவரும் மிகுந்த நேர்மையான அதிகாரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 


கடந்த காலங்களில், பெரும்பாலான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தனர். அதிகாரியுடனான நெருக்கத்தைக் காட்டி, முறையாக பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால், அவர்களை எல்லாம் ஒழுங்காக பள்ளி பணியாற்ற வைத்தார் கணேஷ்மூர்த்தி. எங்களுடைய அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், நேர்மையான அதிகாரியான அவர் தொடர்ந்து இந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
 


கணேஷ்மூர்த்தியுடன், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் என்பவரும் ஜூன் 7ன் தேதி திடீரென்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவரும் ஆளுங்கட்சியினரின் சிபாரிசுகளை ஏற்காததால்தான், நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார் என்கிறார்கள். இத்தனைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். இருவரும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
 


இது ஒருபுறம் இருக்க, அய்யண்ணனை சேலம் மாவட்டத்திற்குக் கொண்டு வருவதற்காகவே கணேஷ்மூர்த்தியை பலிகடாவாக்கி இருப்பதாகவும் ஒரு சாரார் சொல்கின்றனர். அய்யண்ணன் அல்லது நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உள்ள உஷா ஆகியோரில் ஒருவர், விரைவில் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றப்படலாம் என்றும், கணேஷ்மூர்த்தியை டம்மியான பணியிடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் யூகங்கள் கிளம்பியுள்ளன.


அதிமுக ஆட்சியில், நெஞ்சின் உரத்திற்கும் நேர்மைத்திறத்திற்கும் கிடைக்கும் பரிசு, ஒன்று இடமாறுதல் அல்லது மரணம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.