Skip to main content

“ஸ்டாலின் குறித்து திமுக நிர்வாகிகள் பேசுவதென்ன?”- கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகாசியிலுள்ள தேவர் சிலைக்கு  மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,
 

“ஆணவப்பேச்சு யாரு பேசுறாங்க? எடப்பாடி அண்ணனா பேசுறாரு? இருக்கிற அரசியல்வாதிகள்ல வெளிப்படைத்தன்மையா பேசக்கூடியவர்... உண்மைத்தன்மையா பேசக்கூடியவர்... மனிதநேயத்துடன் பேசக்கூடியவர்.. எல்லாரையும் மதிக்கக்கூடிய அன்பானவர் எடப்பாடியார். இது உலகம் அறிந்த உண்மை. அவர் கூட பழகியவர்கள் அறிந்த உண்மை. ஆனால்.. ஸ்டாலின் பற்றி தி.மு.க நிர்வாகிகள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மற்றவர்களைக் குறை கூற வேண்டும். ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் எடப்பாடியாரை மையப்படுத்தி தாக்கினால்.. ஓபிஎஸ்ஸை மையப்படுத்தி தாக்கினால்.. அதிமுக பிரிவுபட்டு விடும்; பிளவுபட்டு விடும்; சிதைந்துவிடும்; அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்ற கணக்கோடு, இருபெரும் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார்.   


அவருடைய நாடகம் எடுபடாது. எடப்பாடியார் ஆணவப்பேச்சு எப்போதும் பேசியது கிடையாது.  நாடாளுமன்ற தேர்தலிலே ஒரு பொய்யான வாக்குறுதியைச் சொல்லி அவர் பெற்ற வெற்றியை வைத்து எந்த அளவுக்கு தம்பட்டம் அடித்தார்கள்.  இந்த ஆட்சியிலிருந்து  உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். முதலமைச்சர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று எந்த அளவுக்கு கொக்கரித்தார்கள் என்பதை ஊரறியும். ஆணவத்தின் உச்சத்திலே ஸ்டாலின் பேசினார். ஆனால், அடக்கத்தோடு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கருத்து சொல்லக்கூடியவராக இருக்கிறார் எடப்பாடியார். மிகத் தேர்ந்த அரசியல் தலைவராக இன்றைக்கு எடப்பாடியார் விளங்குகிற காரணத்தால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்ப ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். அவரால் இனி புலம்பத்தான் முடியும். பொறுப்பான இடத்துக்கு வரக்கூடிய வாய்ப்பை தமிழக மக்கள் தரவே மாட்டார்கள். 

DMK PRESIDENT MK STALIN  MINISTER RAJENDRA BALAJI SAID



ஸ்டாலின் கடந்த காலத்தை மறந்துவிட்டார். தாமிரபரணி ஆற்றங்கரையில் பச்சைக்குழந்தைகளோடு ஊர்வலம் போன எத்தனையோ ஏழைப் பெண்களை தண்ணீருக்குள் அமுக்கிக் கொன்றார்கள். குழந்தை சுஜித் குழிக்குள் விழுந்தவுடன் 5 அமைச்சர்கள் 5 நாட்களாக அங்கே முகாமிட்டார்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அரசு எந்த அளவுக்குப் பணியாற்றியது என்பதை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், இந்தியர்கள் அத்தனைபேரும் அறிவார்கள். இன்றைக்கு வைகோ, திருமாவளவன் பேட்டிகூட பார்த்தேன். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியிருக்காங்க. ஸ்டாலின் ஒருவர் மட்டும் பாராட்ட மாட்டார். அவருக்குப் பாராட்டுவதற்கு மனம் கிடையாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வெற்றியால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உருவாகியிருக்கிறது. திமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு சேர்வு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டாலின், தன்னைத் திருத்திக்கொண்டால் தமிழக மக்களால் மதிக்கப்படுவார். தொடர்ச்சியாக இதுபோலவே செய்துகொண்டிருந்தால், தமிழக மக்களால் முற்றிலும் ஓரம்கட்டப்படுவார்.
 

உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக டிசம்பரில் நடைபெறும் என்று முதல்வரே சொல்லிவிட்டார். தேர்தல் ஆணையமும் சொல்லிவிட்டது. அதில் எந்த பிரச்சனையும் கிடையாது. விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். டாக்டர் சங்க தலைவரே பேட்டி கொடுத்துவிட்டார். நேற்றிரவே வாபஸ் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு என்ற உத்தரவாதத்தை முதலமைச்சர் தந்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுவிட்டனர். டாக்டர் தொழில் என்பது மனித நேயமிக்கது. அவர்களின் ஸ்டிரைக்கால் பாதிக்கப்படக்கூடியது பணக்காரர்கள் கிடையாது. ஏழை எளிய மக்கள்தான். அவர்கள்தான் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்கிறார்கள். அவர்களுடைய இறப்புக்கு எந்த ஒரு டாக்டரும் காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். போராட்டம் நடத்தினார்கள். அரசின் உத்தரவை ஏற்று வாபஸ் பெற்றிருக்கிறார்கள். டாக்டர்கள் மனித நேயம் உள்ளவர்கள் என்பதற்கு உதாரணமாக அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதைச் சொல்லலாம்.” என்றார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்