
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிகரையை ஒட்டியுள்ளது வாழக்கொல்லை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன் - மாலா தம்பதியின் மகள் கதிர்செல்வி (வயது 27). இளங்கலை வேளாண்மை பயின்றுள்ள இவர் கடந்த 2023ஆம் ஆண்டு குரூப்- 4 தேர்வில் வெற்றிபெற்று அதில் கிடைத்த பணிக்கு செல்லாமல் குரூப்-1 தேர்விற்கு கடும் முயற்சியோடு படித்து வந்தார்.
அதன்படி கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை எழுதியிருந்தார். சில தினங்களுக்கு முன் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தேர்வில் கதிர்செல்வி மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அக்கிராம மக்கள் மட்டுமின்றி சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. வெற்றி பெற்ற இவர் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தை காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தில் உள்ள அவரது விட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதேபோல் சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடி எஸ்.டி சியோன் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். இந்த பள்ளியின் முன்னாள் மாணவி தமிழக அளவில் வெற்றி பெற்றதையொட்டி பள்ளியில் கதிர்செல்விக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர்கள் சாமுவேல்,சேன்றி தேவா பில், குழந்தைகள் நிர்வாக இயகுனர் சுஜின், குழந்தைகள் நல மருத்துவர் தீபாசுஜின், தலைமை ஆசிரியர் ஆண்டனி, ஆசிரியர் கழகத் தலைவர் புகழேந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.