
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29வது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (13.04.2025) இரவு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பு 205 ரன்களை குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 33 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். அதே போன்று ரியான் ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தார். எனவே டெல்லி அணி வெற்றி பெற 206 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்தது. இதன் மூலம் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது.
இருப்பினும் டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. ஆகையால் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் தனது சிறப்பான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மும்பை அணியைச் சேர்ந்த கார்ன் சர்மா வென்றார். இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றியையும், 1இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதே சமயம் மும்பை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியையும், 4இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.