Skip to main content

“தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிக கல்லூரிகள் இருக்கிறது” - அமைச்சர் சக்கரபாணி

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

 Dindigul district has most colleges in Tamil Nadu says minister sakkarapani

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி புதிய வகுப்புகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். நத்தத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உயர்கல்வியின் துறையின் சார்பில் அரசு மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைத்துள்ளார். நத்தத்தில் அதிகளவில் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றால் வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது, இக்கல்லூரியின் மூலம் இப்பகுதி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக அமைந்துள்ளது. முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூரில் 2 அரசு கலைக் கல்லூரியும், ஒட்டன்சத்திரத்தில் 2 அரசு கலைக் கல்லூரியும், நத்தத்தில் 1 அரசு கலைக் கல்லூரியும், ஒட்டன் சத்திரத்தில் 1 தொழிற்பயிற்சி நிலையம், குஜிலியம்பாறையில் 1 தொழிற்பயிற்சி நிலையம், பழனியில் 1 சித்தா கல்லூரியும், கொக்கானில் கூட்டுறவுத்துறையின் சார்பில்  ஒரு கூட்டுறவு பயிற்சி இணையம்  என தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் 9 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

 Dindigul district has most colleges in Tamil Nadu says minister sakkarapani

திண்டுக்கல் மாவட்டத்திற் கு கடந்த 48 மாத ஆட்சியில் 9 கல்லூரிகள் அமைத்துக் கொடுத்தவர் முதலசை்சர். இப்படி நாம் கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார். விரைவில் குஜிலியம்பாறை, நத்தம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் புதியதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு 110 விதியின்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு நத்தத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, இக்கல்லூரியில் 5 பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நத்தம் கே.எஸ்.எஸ் முகமது யூசூப் அவர்களின் நினைவாக, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்காந்தர் பாட்ஷா குடும்பத்தினர் 5 ஏக்கர் நிலத்தினை இக்கல்லூரி கட்டுவதற்கு தானமாக வழங்கி உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமானவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.44,000 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.8.000 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

தமிழ் நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் உயர்ந்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற 55 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்