Skip to main content

குடிநீரில் கழிவுநீர் கலப்பு! தொற்றுநோய் பரவும் அபாயம்!! 

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

Contaminated water


 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகர், ரெங்கநாதபுரம், மில்மேடு, ரத்னகிரி, சாந்திநகர், ஏ.வி.எஸ்.நகர், வரதராஜபுரம், புதுப்பட்டி உட்பட 10 கிராமங்கள் உள்ளன. இதில் போக்குவரத்து நகருக்கு மட்டும் முறையாக குடிதண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் செய்கின்றனர். இதுதவிர 8வது வார்டு பகுதியில் 10நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். கடந்த ஒருமாத காலமாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீர் மாசடைந்து வருவதாகவும், பாத்திரங்களில் சேகரித்து வைக்கும் போது புழுக்கள் மிதப்பதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து ஊராட்சி செயலர் தண்டபாணியிடம் புகார் செய்துள்ளனர்.
 

இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மருத்தவத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்ததை அடுத்து வெள்ளிக்கிழமை காலை 6மணியளவில் அப்பகுதிக்கு வந்து பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிதண்ணீரை சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர பலருக்கு வயிற்று போக்கு நோய் வந்து அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி செயலர் தண்டபாணியிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தோம்.


இதையடுத்து அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குடிதண்ணீரை சோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர். ஊராட்சி செயலாளர் இனிமேல் உங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்காது, குழாய் இணைப்பை துண்டித்துவிடுவேன் என மிரட்டுகிறார். மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு முறையான சுகாதாரமான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்றும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் செய்த பொதுமக்களிடம் உங்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க மாட்டேன் குழாய் இணைப்பை துண்டித்துவிடுவேன் என கூறும் ஊராட்சி செயலாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.