
உழவாரப்பணி செய்ய வந்த இளம்பெண்ணை சிவாச்சாரியார் ஒருவர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வரும் தியாகராஜன் என்பவர் அதே கோவிலில் உழவாரப்பணி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிடம் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி கடந்த ஒரு வருடங்களாக ஏமாற்றி வரும் அர்ச்சகர் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். எஸ்.பி ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கோயில் அர்ச்சகர் மீது 4 பிரிவுகளின் கீழ் கோவில் சிவாச்சாரியார் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அனைத்து தரப்பினரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது பாலியல் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் ஒரு பெண் டிஎஸ்பி சிறப்பதிகாரியாக போட்டு விசாரணை நடத்துகின்றனர். அவரை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், தியாகராஜனுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்க நோட்டீஸ் ஜூன் 6-ம் தேதி தரப்பட்டுள்ளது. அந்த நோட்டீசை அவருக்கு நேரில் வழங்குவதற்காக அதிகாரிகள் வீட்டிற்கு சென்றபோது அந்த அர்ச்சகர் வீட்டில் இருந்து உள்ளார். ஆனால் காவல்துறையில் அவரை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
இவர் பாஜக பிரமுகர்களுடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்துள்ளார். பிரதமர் மோடியை ஒரு நிகழ்ச்சியில் பூரணக் கும்பம் மரியாதை தந்து வரவேற்பு தந்துள்ளார். இந்து அமைப்புகள் இந்த அர்ச்சகர் இந்து மதத்திற்கு விரோதமாக நடந்து கொண்டுள்ளார் இவர், அதனால் சுவாமிக்கு அர்ச்சனையை செய்யும் தகுதி இழந்து விட்டார். இவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த அர்ச்சகருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டாவதாக இதேபோல் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்பொழுது மூன்றாவதாக ஒரு பெண்ணை இடமும் இப்படி நடந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.