
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான கடற்கரை ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவிலில் ஹெச்.சி. எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டவளாக பணிகளும், அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளும் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மற்ற பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதைத் தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் 2025 ஜூலை 7ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் மூலவரான சுப்ரமணியருக்கு திருக்கோயில் உள் பிரகாரத்திலும், சுவாமி சண்முகருக்கு கோயில் கிரி பிரகாரத்தில் ராஜகோபுர மேற்கு வாசல் அருகேயுள்ள இடத்திலும் நடத்த பந்தல் கால் நடும் நிகழ்ச்சி மற்றும் யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மே மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. தற்போது அந்த இடத்தில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
யாகசாலை பந்தலில் 76 ஹோம குண்டங்கள் அமைக்கப்படவுள்ளன. ஜூலை 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 12 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் அமர்ந்து பார்க்க ஏதுவாக 2000 சதுர அடி பரப்பளவில் கேலரி அமைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி 16 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேகத்தை காண 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தர கூடும் என்பதால் அதற்கேற்ப பணிகள் திட்டமிடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாரம்பரியமாக நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சாஸ்திர ரீதியிலான நிகழ்ச்சிகளை, தலைமுறை தலைமுறையாக நாள் நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்து கொடுக்கும் திருக்கோயில் விதாயகர்த்தா சிவ ஸ்வாமி சாஸ்திரி தரப்பினர், இன்னும் ஒரு 12 வருஷத்துக்கு.... அதாவது அடுத்த கும்பாபிஷேகம் வரும் வரை எந்த பிரச்சனையும் வராமல் இருக்கணும்னா மஹா கும்பாபிஷேத்துக்கான நேரத்தை பகல் 12.05 முதல் 12.47 வரை உள்ள அபிஜித் முகூர்த்த நேரத்தில் நடத்த வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி ஆனது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் ஜூன் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. எனவே இது போன்ற நிலையில் நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. அதுமட்டுமின்றி இதில் தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. இந்த வழக்கின் மனுவை மறுபரிசீலனை செய்யவும் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நேரத்தை மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தனர்.
கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மஹா கும்பாபிஷேகத்துக்கான நேரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி