Skip to main content

குற்றச்சாட்டுகளில் சிக்கிய நீதிபதிகள் மூவர் பணி நீக்கம்!- உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு அதிரடி!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய 3 நீதிபதிகளை பணி நீக்கம் செய்தும், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்தும் உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அனைத்து நீதிபதிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை நீதிபதிகள் எடுத்துள்ளனர். குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய நீதிபதிகள், திறமையற்ற நீதிபதிகள் ஆகியோரை பணி நீக்கம் செய்வது, பணி நீட்டிப்பு மறுப்பது, ஊதிய உயர்வு ரத்து செய்வது என்பது போன்ற முடிவுகளை எடுத்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நாமக்கல் மாவட்ட முன்னாள் கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி மான்விழி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை ஓய்வு பெறவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், இவரை பணி நீக்கம் செய்யவும், ஊழல் வழக்கை அவர் எதிர் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து நீதிபதிகள் குழு முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.

chennai high court judges decide and district judges related issues also discussed

அதுபோல, முன்னாள் கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் முதன்மை நீதிபதி டி.பொன்பிரகாஷ் ஆகியோர் குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது இந்த 2 நீதிபதிகளையும் பணி நீக்கம் செய்ய நீதிபதிகள் குழு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை வரி விதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி செல்லபாண்டியன், உடல்நலக் குறைவின் காரணமாக 55 வயதில் கட்டாய ஓய்வில் செல்ல அனுமதி வழங்கியும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர,  55 முதல் 58 வயது வரையிலான 8 மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் நீதிபதிகள் குழு மறுத்துள்ளது.


அதாவது, சேலம் செசன்சு நீதிமன்ற நீதிபதி என்.திருநாவுக்கரசு கோபிச்செட்டிப்பாளையம் செசன்சு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.மணி, நாகர்கோவில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி எம்.கோமதிநாயகம், சென்னை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசன், சென்னை செசன்சு நீதிமன்ற நீதிபதி தானேந்திரன், கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ், திருநெல்வேலி செசன்சு நீதிமன்ற நீதிபதி தேவநாதன், திருவள்ளூர் லோக் அதாலத் முன்னாள் நீதிபதி எம்.பிச்சயம்மாள் ஆகியோருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
 

4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய்கிஷன் கவுல் (தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி) இருந்தபோது, 10 மாவட்ட நீதிபதிகளை மொத்தமாக பணி நீக்கம் செய்து நீதிபதிகள் கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது. அதுபோல, தற்போதும் நீதிபதிகள் குழு கூட்டத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  


 

சார்ந்த செய்திகள்