
சென்னை வேளச்சேரியில் நேற்று இரவு, பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
சென்னை வேளேச்சேரியில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வரும் பெண் ஒருவர் நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்த நபர் கிண்டியில் தங்கி இருந்த கார் ஓட்டுநர் வினோத்(30) என்பது தெரியவந்தது. போலீசார் கைது செய்ய முயன்றபோது மனைவியும், குழந்தையும் கோடை விடுமுறைக்காக சொந்த சென்ற நிலையில் மனஉளைச்சலில் மதுபோதையில் அவ்வாறு செய்ததாக கதறி அழுதுள்ளார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.