
சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு செல்லக்கூடிய சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் சுமார் 10 அடி ஆழம் கொண்ட சாலை பள்ளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலை என்பதால் அந்த பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டு பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் பைப் லைனில் ஏற்பட்ட மண் அரிப்பால் விரிசல் ஏற்பட்டு பள்ளம் உருவாகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் கார் சிக்கிக்கொண்ட நிலையில் காயங்களுடன் ஓட்டுநர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.