
தூத்துக்குடி மாவட்டம் - மணக்கரை பகுதியைச் சேர்ந்த குற்றவாளி துரைமுத்துவைப் பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவலர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அப்போது, குற்றவாளி தப்ப முயன்ற போது, காவலர்கள் தொடர்ந்து சென்றனர். அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, காட்டு பகுதியில் இருந்த குற்றவாளி, தன்னைப் பிடிக்க வந்த காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளான். அந்த நாட்டு வெடிகுண்டு வீச்சில், 28 வயதே ஆன காவலர் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததோடு, சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், சுப்பிரமணியன் மறைவு குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைப் பதிவிட்டு, புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

‘மிடுக்கானது தமிழ்நாடு காவல்துறை! துடிப்பானவர் காவலர் சுப்பிரமணியன்! வன்முறைக்கு அவர் பலியானார் என்ற செய்தி மனிதநேயத்தை உலுக்குவதாக இருக்கிறது. உன் பிள்ளைக்குத் தகப்பன் இல்லை; ஆனால், தாய்மாமன்கள் லட்சம் பேர் உள்ளோம். உன் வீரத்திற்கு, தமிழகத்தின் தலைமகன் எடப்பாடியார் தலை வணங்குகிறார். கடமைவீரர் காவலர் சுப்பிரமணியனுக்கு வீரவணக்கம்! உனக்கு எனது புகழஞ்சலி! என்று குறிப்பிட்டுள்ளார்.