
நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரை ரத்து செய்யக்கோரி, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தொடர்ந்த மனுவிற்கு, சென்னை மத்திய குற்றபிரிவு 8 வாரங்களில் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். இதற்காக வழங்க வேண்டிய ரூபாய் 40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலாவும் கூறியுள்ளனர். அந்த நிலத்துக்காக, இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூபாய் 2.70 கோடியை கூடுதலாகப் பெற்று மோசடி செய்து விட்டதாக, காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் குடவலா, மற்றும் அன்புவேல் ராஜன் மீது பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.