Skip to main content

144 தடை உத்தரவு?? ஜெ.பாணியில் எடப்பாடி ரகசியத் திட்டம்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பகீரத முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியைவிட 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றியைத்தான் மிக முக்கியமாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

         

 

நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது (ஏப்ரல்-18). காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ல் தேர்தலை நடத்த முன்வந்த தேர்தல் ஆணையம், நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 4 தொகுதிகளுக்கும் மே 19-ல் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை மே 23-ல் நடக்கிறது. 

          

election

 

’’தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலவரத்தின்படி பெரும்பான்மை பலமில்லாத அரசாக இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதனால், மே 23-ல் எடப்பாடிக்கு க்ளைமாக்ஸ் உருவாகியிருக்கிறது. ஆட்சிக் நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது மே 23-க்குப் பிறகு தெரியவரும். அந்த வகையில், தனது ஆட்சியை நிலைநிறுத்தும் நெருக்கடியில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை விட , இடைத்தேர்தல் வெற்றியில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி. இதற்காக, ஜெயலலிதா பாணியில்  ரகசிய திட்டத்தை கையிலெடுத்துள்ளார் அவர் ’’ என்கிறார்கள் அதிமுகவிற்கு நெருக்கமான அதிகாரிகள்.  

               

அது என்ன ஜெ.பாணி அரசியல்? 

               

 

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார். மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மோடி பிரதமர் ஆவார் எனவும் தேசம் முழுவதும் ஒரு அலை வீசிய நேரத்தில், ’தமிழகத்தில் மோடி அலை கிடையாது. மோடியா? இந்த லேடியா? பார்த்துவிடுவோம்‘ என சவால் விடுத்தார் ஜெயலலிதா. 

                

election

 

அதற்கேற்ப, வெற்றிப் பெறுவதற்கான வழிகளை தனது செக்ரட்டரிகளிடமும் உளவுத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக விவாதித்துப்படி இருந்தார். உளவுத்துறை அதிகாரிகள்,  ’ ஓட்டுக்கு பணம் வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஆண்-பெண் வித்தியாசமில்லாமல் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தப்படி இருக்கிறது. வாக்குகளை பர்ச்சேஸ் பண்ணுவதன் மூலம் இலக்கை அடைய முடியும் ’ என யோசனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அந்த பணத்தை எப்போது தரலாம்? என நடத்திய ஆலோசனையில், வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் மக்களிடம் சேர்க்கப்படும்பட்சத்தில் அதனை நினைவில் வைத்திருப்பார்கள் என விவரித்தனர். அதன்படி, காரியத்தை நடத்தி முடித்தார் ஜெயலலிதா. 

           

 

எப்படி சாதித்தார் ? என அன்றைக்குத் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘’ வாக்குப்பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்படும். அதன்பிறகு, வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிக்கலாமே தவிர பிரச்சாரம் செய்ய முடியாது. அதனால், அதிமுகவுக்கு இணையாக திமுகவினர் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வலம் வருவர். ஆளும்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்களா? என கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பார்கள். அதனை மீறி முழுமையாக பணம் கொடுப்பது சாத்தியமில்லை. அப்படியே கொடுத்தாலும் கலவரங்கள்தான் வரும். 

            

election

 

அதனால், கும்பல் கும்பலாக திமுகவினர் சுற்றி வருவதைத் தடுக்க வேண்டுமாயின் 144 தடை உத்தரவு அமலில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். திமுகவினர் கும்பலாக சுற்றுவதை தடுத்தாலே மக்களை நாம் எளிதாக அணுகிவிட முடியும். ஆக, 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி எடுங்கள் என ஜெயலலிதாவிற்கு ஐடியா தந்தனர்  அதிகாரிகள்.

             

 

இது குறித்து, அன்றைக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ்.சிடம் ஜெயலலிதாவின் செக்ரட்டரிகள் ரகசியமாக ஆலோசித்தனர். அப்போது, டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்தால், 144-ஐ அமல்படுத்த எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என சொல்லியிருக்கிறார் பிரவீன்குமார். இந்த விபரம் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது சோர்ஸ்கள் மூலம் காய்களை நகர்த்தினார் ஜெயலலிதா. அதற்கேற்ப பிரவீன்குமாருக்கு டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

              

 

இதனையடுத்து, ‘ ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தமிழகம் முழுவதுமிருந்து நிறையப் புகார்கள் வருகின்றன. அதனால், அரசியல்கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க, பிரச்சாரம் முடிந்த நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது ‘ என அறிவித்தார் பிரவீன்குமார். 

               

 

அதற்கேற்ப திமுகவினரை கண்காணித்தபடி தேர்தல் பார்வையாளர்கள் ஜெயலலிதா போலீஸ் துணையுடன் வலம் வந்தனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாமல் திமுகவினர் திணறினர். அதேசமயம், மற்றொருபுறம் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு இரண்டு நபர்களாகப் பிரிந்து வாக்காளர்களுக்குப்  பணத்தை விநியோகித்து முடித்தது அதிமுக. இதுதான் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுத்தது ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள். 

               

 

ஜெயலலிதாவின் இந்த பாணியை கையிலெடுத்திருக்கும் எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் ரகசியமாக இது குறித்து விவாதித்திருப்பதுடன் 144 தடை உத்தரவை அமல் படுத்துவதற்காக டெல்லியின் உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.