Skip to main content

“இந்த ஸ்டாலினுக்கும் புதுச்சேரியின் மீது பாசம் தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

"This Stalin also has affection for Puducherry" - CM Stalin's speech

 

கலைஞர் ‘குடியரசு’ வார இதழில் ஆசிரியராகவும், பெரியாரோடு பழகுவதற்கும் புதிய பாதை தந்தது புதுவைதான் என கலைஞர் குறித்த சில சுவாரசிய நிகழ்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.  

 

புதுச்சேரி மாநிலம் பட்டனூரில் புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமாரின் குடும்ப திருமண நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேடையில் பேசுகையில், ''சிவக்குமார் வெறும் செயல்வீரர் மட்டுமல்ல. எப்பொழுதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாக பேசக்கூடிய ஒருவர் சிவகுமார். அதனை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன். கலைஞரை ஒருமுறை ஒரு கல்லூரியின் சிறப்புப் பேச்சாளராக பேச வைப்பதற்காக அழைத்திருக்கிறார். கலைஞரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

 

அந்த நிகழ்ச்சியில் சிவக்குமார் பேசுகின்ற போது கலைஞரைப் பார்த்து ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். வேண்டுகோள் என்று கூட சொல்ல மாட்டேன், ஒரு கட்டளை. என்னவென்றால், நீங்கள் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கட்சித்தலைவருக்கு இப்படிக் கட்டளை இடலாமா என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் பேசியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கலைஞர் 'இளங்கன்று பயமறியாது என்பதை போல சிவகுமார் பேசியிருக்கிறார். சிவகுமாரைப் போன்ற இளைஞர்கள் கட்டளையிடவும், என்னை போன்றவர்கள் அதை நிறைவேற்றவும் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கலைஞர் அப்பொழுதே குறிப்பிட்டிருக்கிறார். எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு துணிச்சல் மிக்கவர் சிவக்குமார்.

 

அவர் பொது வாழ்விற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு மறக்காமல் வாழ்த்துச் செய்தியை நான் அனுப்பி இருந்தேன். அதில் நான் குறிப்பிட்டு இருந்தேன் 'திமுகவின் மாணவர் அணியின் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து புதுச்சேரியில் இயக்கத்தை வளர்க்கக்கூடிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கலைஞரின் அன்பைப் பெற்றவர்; பேராசிரியரின் வாழ்த்தைப் பெற்றவர்; புதுவை மக்களுடைய நன்மதிப்பை, ஆதரவைப் பெற்றவர்' என்று நான் பாராட்டியிருந்தேன். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்ற காரணத்தால் திராவிட இயக்கத்தின் இலக்கியத் தலைநகர் என்று சொல்லத்தக்க பெரும் புகழைக் கொண்டது இந்த புதுச்சேரி.

 

கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் அவர் பயின்று வளர்ந்தது குருகுலம் என்று அடிக்கடி சொன்னது ஈரோடு தான். அவர் கொள்கை உரம் பெற்ற ஊர் எது என்று கேட்டால் இந்த புதுச்சேரி தான். திராவிடக் கழகத்தின் பரப்புரை, பிரச்சாரம், நாடகம் என அவைகளை ஊர் ஊராகச் சென்று கலைஞர் நடத்தினார். அந்த நாடகத்தின் அரங்கேற்றம் எங்கே நடந்தது என்றால் இந்த புதுச்சேரியில் தான். அவர் நடத்திய நாடகம் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. காரணம், திடீரென்று ஒரு கலகக் கும்பல் உள்ளே புகுந்து அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்.

 

அப்பொழுது கலைஞரை பலமாக தாக்கிவிட்டு சாக்கடையில் வீசி விட்டு போய்விட்டார்கள். பார்த்தவர்கள் எல்லாம் கலைஞர் இறந்து விட்டார்... இறந்துவிட்டார்... என்றுதான் நினைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அந்த அளவிற்கு தாக்கப்பட்டு கலைஞர் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார். மறுநாள் காலையில் தந்தை பெரியார் அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து, கலைஞரைத் தூக்கி தனது மடியிலேயே வைத்து, மருந்து போட்டு, இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டாம். என்னோடு வா, என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். என்னுடைய குடியரசு என்ற வார இதழில் நீ துணை ஆசிரியராக பணியாற்று என்று பெரியார் கலைஞரிடத்தில் சொல்லிவிட்டார். எனவே கலைஞர் குடியரசு வார இதழில் ஆசிரியராகவும், பெரியாரோடு பழகுவதற்கும் புதிய பாதை தந்தது புதுவை தான். அவருக்கு மட்டுமல்ல அவருடைய மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலினுக்கும் புதுச்சேரியின் மீது பாசம் தான். அந்தக் கொள்கை உணர்வில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.