Skip to main content

"கஜானாவை கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்!" - மு.க.ஸ்டாலின் சூளுரை !

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

 

Rescue- Tamil Nadu -from -AIADMK looting- treasury - MK Stalin's motto!

 

தி.மு.கவினருக்கு, மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "கஜானாவை கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்" எனக் கூறியுள்ளார். மேலும், "ஊழல்களிலிருந்து தனது ‘டாடி’ மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என பால் வளத்துறை அமைச்சர் நினைக்கலாம். ஊழலின் நாடியைச் சரியாகப் பிடித்திருக்கிறோம். கழக ஆட்சி அமையும்போது அதற்கான சிகிச்சைகள் தேடித் தேடித் திரட்டிக் கிடைத்திடும்" எனக் கூறியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, "கரோனா தொற்றைவிடவும் பன்மடங்கு கொடுமையான ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அ.தி.மு.க அரசின் ஊழல் கொள்ளைப் பிடியிலிருந்து, இந்த மாநிலத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் வளர்த்தெடுத்துக் காப்பதற்கான ஜனநாயகத் திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல். ஜனநாயகக் களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், இந்தக் கரோனா பேரிடர் காலத்திலும், தொடக்கம் முதலே தமிழக மக்களுக்குத் துணையாக நிற்கிறது.

 

“ஒன்றிணைவோம் வா" எனும் மாபெரும் செயல்திட்டத்தினால், மக்களின் துயர் துடைத்த தி.மு.கழகம், பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்கப்படவேண்டிய பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் கொண்டு தொடர்ந்து பொதுக் காரியங்களை ஆற்றி வருகிறது. இந்தியாவிலேயே காணொலி வாயிலாகப் பொதுக்குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமைக்குரிய இயக்கமாக இது திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, முப்பெரும் விழாவும் அதில் விருதுகள் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன.

 

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மட்டும்தானா முப்பெரும் விழா, அனைத்து மாவட்டங்களிலும் நடத்திக் காட்டுவோம் என மாவட்டக் கழகச் செயலாளர்கள் காட்டிய முனைப்பின் காரணமாக, காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களிலும் முப்பெரும் விழாக்கள் எப்போதும் இல்லாத எழுச்சியுடன் நடைபெற்றன. அதனைப் பல நூறு இடங்களிலும் உள்ள கழக அமைப்பினர் காணொலி வாயிலாக இணைத்து, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மகிழ்ந்திடும் வகையில் வெற்றிகரமாக நடத்தினர்.

 

கரோனா காலத்தின் நடைமுறைச் சிக்கல்களைத் தொழில்நுட்பத்தின் மகத்தான உதவியுடன் தி.மு.க வென்றுகாட்டியது. அதே கரோனா காலத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்தின் கஜானாவைக் கொள்ளையடித்தும் - வெற்று விளம்பரம் தேடிக்கொண்டும் மக்களை ஏமாற்றுகிறது அடிமை அ.தி.மு.க. அரசு. மக்களின் நலனுக்காக - அவர்களின் உரிமைகளுக்காக நாம், கரோனா நேரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்கிறார்கள் காவல்துறையினர். அதேநேரத்தில், மாவட்ட ஆய்வு - நல உதவி என்ற பெயரில் அரசாங்கப் பணத்தில் அரசியல் செய்யும் முதல்வரின் நிகழ்வுகளில் எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் கூட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்து படம் காட்டி வருகிறார்கள். அவரது கார் போகும் பாதையில் ஆட்களைத் திரட்டி வைத்து, ஏற்கனவே கொடுத்த பயிற்சியின்படி குரலெழுப்பச் செய்கிறார்கள். போகட்டும்… இன்னும் சில மாதங்களுக்குத்தான், தவறான இந்தத் தடமும் ஆடம்பரப் படமும்!

 

தி.மு.கழகம் என்பது எப்போதும் மக்களின் இயக்கம். கூவத்தூரில் குனிந்து வளைந்து பதவி வாங்கி, பவிசுகளைச் சேர்த்துக் கொண்டாடிக் கூத்தடிக்கும் இயக்கம் அல்ல. ஜனநாயகம் காப்பதற்காக இரண்டு முறை ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம். அதனால்தான் ஜனநாயகக் களமான சட்டமன்றத் தேர்தலுக்காகத் தன்னை ஆயத்தப் படுத்திக்கொண்டு, நாள்தோறும் மக்களை நோக்கிக் கடமை ஆற்றச் சென்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான தூய செயல்பாட்டின் ஒரு கட்டம்தான், ‘தமிழகம் மீட்போம்’ என்கிற பெருந்திரள் பொதுக்கூட்ட நிகழ்வுகள்.

 

முதல்கட்டமாக ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் காணொலி வழிப் பொதுக்கூட்டங்கள், லட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், மகத்தான முறையிலே வெற்றிகரமாக நடைபெற்றிருக்கின்றன.

 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சொந்த மண் - பேரறிஞர் அண்ணாவின் அரசியல் பாசறை - முத்தமிழறிஞர் கலைஞரின் குருகுலம் எனும் பெயர் பெற்ற ஈரோடு மாவட்டத்தில், முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்கு மண்டலத்தில் தி.மு.கழகம் பெற்றுள்ள புத்தம் புது எழுச்சிக்குச் சான்றாக ஈரோட்டில் 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டம் தக்க வண்ணம் சிறப்பாக நடைபெற்றது.

 

வழக்கமான பொதுக்கூட்டம் என்றால் குறிப்பிட்ட ஒரு நகரத்தில் உள்ள பெரிய திடலிலே மேடை அமைத்து, அங்கே திரண்டிருக்கின்ற மக்களிடம் நேரடியாக உரையாற்றுவோம். காணொலி வழியான கூட்டம் என்பதால், சென்னையிலிருந்தே உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் உரையாற்ற, ஈரோடு கழக மாவட்டச் செயலாளர்கள் இருவரும் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஒன்றியம் - நகரம் - பேரூர் எனப் பல இடங்களிலும் ஏற்பாடு செய்திருந்த காணொலி அரங்குகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான - ஆயிரத்தைக் கடந்த அளவில் கழகத்தினரும் பொதுமக்களும் திரண்டிருந்ததை என்னால் காண முடிந்தது. நகரம் முதல் சிற்றூர் வரை உள்ள தோழர்கள் அவரவர் ஊர்களில் உள்ள அரங்குகளில் இருந்தே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, உரைகளைக் கேட்கும் வாய்ப்பை காணொலித் தொழில்நுட்பம் வழங்கியது. பூகோள ரீதியாக இடங்கள் வெவ்வேறாயினும், இலட்சிய ரீதியாக இதயம் ஒன்றே என்பதை அனைவர்க்கும் உணர்த்தியது.

 

ஈரோடு போலவே, புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருவரும் சீரிய முறையிலே ஏற்பாடு செய்திருந்த 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டத்தில், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெரும்பேற்றினைப் பெற்றேன். அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட தலைவர் கலைஞரின் முதல் சிலை போலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரத்திலும் உன்னதமான முறையிலே சிலைகள் அமைக்கப்பட்டுத் திறக்கப்படுவதைக் காண்கையில், ஒவ்வொரு உடன்பிறப்பின் உள்ளத்திலும் அவர் எந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து உவகை கொள்ள முடிகிறது.

 

விருதுநகர் மாவட்டக் கழகத்தின் சார்பிலும் நவீன மருதிருவராம், மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருவரும் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் மகத்தான வெற்றியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. 'தமிழகம் மீட்போம்' என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டிய மாவட்டமாக விருதுநகர் இருப்பதை என்னுடைய உரையில் சுட்டிக்காட்டினேன். கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களும் இந்தப் பொதுக்கூட்டத்திலே மிகச் சிறப்பான முறையிலே கருத்துகளை எடுத்து வைத்ததுடன், நிகழ்வு நிறைவடைந்தபிறகு, என்னுடைய உரையில் இருந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பாராட்டியதை பெரும் ஊக்க அமுதமாகக் கருதுகிறேன்.

 

அதுபோலவே, கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நகைச்சுவை தேன் தடவி கருத்து விருந்து வழங்குபவருமான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் உரையும் சிறப்பான முறையிலே அமைந்து, எல்லாரையும் கவர்ந்தது.

 

என்னுடைய உரையில், பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் செய்யும் ஊழல்கள் பொங்கிப் பெருகி வழிந்தோடுவதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினேன். பதில் சொல்ல வக்கற்ற - வகையற்ற நிலையில், நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமின்றி, என் மீது தனிப்பட்ட காழ்ப்பினை அள்ளிக் கொட்டியிருக்கிறார் அந்த அமைச்சர். நெருப்பையே அள்ளிக் கொட்டினாலும் ஏந்திக் கொள்ளும் இதயமிது. ஊழல்களிலிருந்து தனது ‘டாடி’ மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என அவர் நினைக்கலாம். ஊழலின் நாடியைச் சரியாகப் பிடித்திருக்கிறோம். கழக ஆட்சி அமையும்போது அதற்கான சிகிச்சைகள் தேடித் தேடித் திரட்டிக் கிடைத்திடும். அந்த அமைச்சர் ஒருவர் மட்டுமல்ல, அமைச்சரவை மொத்தமும் அப்படித்தான் என்பது தமிழ் அகிலத்துக்கும் தெரியும். அதனை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், வழக்கும் தொடுத்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறது தி.மு.கழகம்.

 

அதனை எதிர்கொள்ள இயலாமல் வாய்தா வாங்கியும், உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணைக்குத் தடைகள் பெறுவதிலும்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள். கழகம் எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளால் ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் கோபமும் ஆற்றாமையும், உங்களில் ஒருவனான என்னையும் நம் உயிருக்கு உயிரான கழகத்தையும் கொச்சைப்படுத்தி - அவதூறான - தரம்தாழ்ந்த போஸ்டர்களை இருண்ட நேரத்தில் ஒட்ட வைக்கிறது. குனிந்து - தவழ்ந்து முதுகெலும்பை முற்றும் இழந்தவர்களுக்குத் துணிச்சல் எங்கே இருக்கும்? அதனால்தான் அச்சிட்டது யார் என்பதைக்கூடப் போடாமல், சட்டத்திற்குப் புறம்பான முறையிலே திருட்டுத்தனமாகப் போஸ்டர்களை ஒட்டுகிறார்கள்.

 

இன்னும் சில மாதங்களில் இருட்டைக் கிழித்தெறியும் உதயசூரியன். அப்போது இந்தத் திருட்டுத்தனங்களின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம். அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் முழுமையாக மீட்கப்படும்.

 

cnc

 

நான்காவது பொதுக்கூட்டம் காணொலி வாயிலாகத் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. முந்தைய கூட்டங்களைப் போலவே இங்கும் நகரம் - ஒன்றியம் - பேரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள அரங்குகளில் மக்கள் திரண்டிருந்தனர். தொலைக்காட்சி நேரலையிலும் பலர் பார்த்தனர்.

 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே, அதுபோல தமிழ்நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதற்கு, தூத்துக்குடி மாவட்டம் ஒன்றே சரியான எடுத்துக்காட்டாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறை, காக்கை - குருவிகளைச் சுட்டுத்தள்ளுவதைவிடவும் மோசமாகச் சுட்டுக்கொன்று, இந்த அரசு யாருடைய உத்தரவின் கீழ் இயங்குகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டிய கொடூர நிகழ்வை இன்றளவிலும் மறக்க முடியுமா?

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகனான, ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட சிறையில் அடைக்கப்பட்டு, உயிர் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வைத்தான் தமிழகம் மறந்திடுமா?

 

அந்தக் கொலைகளை மறைத்திட ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக அவிழ்த்துப் போட்ட பொய்கள்தான் மக்கள் மனங்களிலிருந்து மறைந்து போகுமா?

 

அவற்றையெல்லாம் எடுத்துரைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.

 

கழக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான தங்கை கனிமொழி அவர்கள் உரையாற்றும்போது, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சிக்குரிய வகையிலே செயலாற்றுகிறது என்பதை எடுத்துரைத்தார். உண்மைதான்; நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழக மக்களின் மனங்களை ஆள்வது தி.மு.கழகம்தான். அதனால்தான், மக்களின் குரலாக, மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் எப்போதும் ஒலிக்கிறோம்.

 

இந்தக் கரோனா பேரிடர் தாக்கத் தொடங்கியபோதே பாதுகாப்பு நடவடிக்கைகளை முதன்முதலாக வலியுறுத்தியது தி.மு.கழகம். அதனை அலட்சியப்படுத்தி சட்டமன்றத்தில் கிண்டல் - கேலி செய்த ஆட்சியாளர்கள்தான், தங்கள் முகத்தை மறைக்கும் மாஸ்க்குடன் வலம் வருகிறார்கள்.

 

கரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடவேண்டும் என தி.மு.கழகம் வலியுறுத்தியபோது, தேர்வு நடத்தாமல் எப்படி மதிப்பெண் வழங்குவது எனக் கேட்ட ‘அறிவார்ந்த’ ஆட்சியாளர்கள்தான், உயர்நீதிமன்றம் குட்டு வைத்ததும் ‘ஆல்பாஸ்’ என அறிவித்தார்கள். அரியர்ஸ் மாணவர்களைக்கூட அரசியல் கணக்குடன் பாஸ் போட வைப்பதும், தேர்வு நடத்தாமல் எப்படி மதிப்பெண் வழங்குவது எனக் கேட்டதும் இதே வாய்தான்.

 

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்து குரல் கொடுத்து, அதற்கான தீர்மானங்களுக்கு ஆதரவும் அளித்த நிலையில், தனது அலட்சியத்தால் நீட் தேர்வு தமிழகத்தில் நுழையக் கதவுகளை அகலத் திறந்தது எடப்பாடி அ.திமு.க அரசு. அதனால் ஆண்டுதோறும் மாணவமணிகளின் தற்கொலை பெருகியது. பழியைத் துடைப்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு என அமைச்சரவை முடிவும் - சட்டமன்றத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டும், ஆளுநரின் ஒப்புதலுக்காக அது கிடப்பிலேயே கிடந்த நிலையில், அதுகுறித்தும் அக்கறையற்ற அரசாகவே எடப்பாடி பழனிசாமியின் அரசு இருந்தது.

 

இந்த ஆண்டே அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், மாபெரும் போராட்டம் நடத்தியது தி.மு.கழகம். அதன்பிறகே, எடப்பாடி அரசு அதனை நடைமுறைப்படுத்த முன்வந்தது. ஆளுநரின் ஒப்புதலும் கிடைத்தது.

 

பேரிடரின் இரண்டாம் அலை வீசும் அபாயம் உள்ளது என அனைத்துத் தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி - கல்லூரிகளைத் திறப்பதாக அறிவித்தது அ.தி.மு.க அரசு. அதன் அபாயம் குறித்து தி.மு.கழகம் விரிவாக எடுத்துரைத்து, பள்ளி - கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைக்க வலியுறுத்தியது. அதைச் செய்தால், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லது என்பதைவிட, மு.க.ஸ்டாலின் சொல்லிச் செய்ததாக ஆகிவிடுமே என்ற காழ்ப்புணர்வினால், கருத்துக் கேட்பு நிகழ்வு என மாற்றி அறிவித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு என்பதைக்கூடவா தமிழக மக்கள் அறியமாட்டார்கள்?

 

‘ஆன்லைன்’ சூதாட்டம் காரணமாக அப்பாவிகள் பலியாவது குறித்தும், அதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டேன். அடுத்த நாள், முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை விதிக்கும் என்கிறார்.

 

இப்படி மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஒவ்வொன்றையும் எதிர்க்கட்சியான தி.மு.க.தான் முன்னெடுக்கிறது. அதன்பிறகே, ஆட்சியில் உள்ளவர்களுக்கு உறைக்கிறது; புத்தி தெளிகிறது. கரோனாவின் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோதே பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து குடும்ப அட்டைக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தி.மு.கழகம். ஆனால், அதனை அலட்சியப்படுத்திய அ.தி.மு.க அரசு, தீபாவளிப் பண்டிகையின் காரணமாகவும், தேர்தல் நெருங்குவதாலும், குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் தரவிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதுவும் இல்லை என அமைச்சர் ஒருவர் ‘தெரு’வாய் மலர்ந்திருக்கிறார்.

 

தி.மு.க சொன்னதை நிறைவேற்றும் வழக்கம் கொண்ட அடிமை அ.தி.மு.க.வின் முதல்வர், இதையும் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள்.

 

nkn

 

மாநிலத்தின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்து, நிர்வாகத்தைச் சீரழித்து, தொழில்வாய்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கி, மாநில அரசுக்குள்ள உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்ட அடிமை அ.தி.மு.க அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கப் போவதில்லை.

 

ஊழலில் திளைத்து - கஜானாவைக் கொள்ளையடிக்கும் அ.தி.மு.க.விடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். அந்த ஒளி, உதயசூரியனால் கிடைக்கும். ஜனநாயக வழியில் தமிழகத்தை மீட்போம்!

 

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே, நான்கு மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்கள் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் அலை அலையான பங்கேற்புடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடக்கட்டும்! தமிழ் மக்களின் பேராதரவுடன், தரணி போற்றத் தமிழகம் மீளட்டும்! " என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” - எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Vote for admk to get development plans Edappadi Palaniswami campaign

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.  இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.