Skip to main content

''கரோனாவை தமிழகத்தில் இருந்து அகற்றியது அதிமுக அரசாங்கம்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு 

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

 "The government that removed Corona from Tamil Nadu is the AIADMK government" - Edappadi Palaniswami's speech

 

மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 51 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தமாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

தற்பொழுது மாநாட்டு மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும்; எந்த நபராலும் முடியாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்த மிகப் பெரிய கட்சி அதிமுக தான். எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக அழித்துவிடும் என்று நினைத்தனர். அது நிறைவேறவில்லை. பிரிந்த கட்சியை ஒன்றாக இணைத்து அதிமுகவைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. எனக்கு புரட்சித்தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. தொடங்கிய ஆறு மாதத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுக தான். கடைக்கோடியில் உள்ள சாமானியனுக்கு கூட அதிமுக ஆட்சியில் நன்மை கிடைத்துள்ளது.

 

1989-ல் சேவல் சின்னத்தில் நின்று முதன்முதலாக வெற்றி பெற்றேன். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம். அமைச்சர் ஆனேன். உங்களுடைய ஆதரவால் தமிழகத்தின் முதலமைச்சராக நான் வந்தேன். அப்பொழுது இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு விமர்சனத்தை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார். இந்த ஆட்சி 10 நாட்கள் தாக்குப் பிடிக்குமா; ஒரு மாதம் தாக்குப் பிடிக்குமா; மூன்று மாதம் தாக்கு பிடிக்குமா என்று ஏளனம் கேலி செய்தார். உங்களுடைய மகத்தான ஆதரவின் பேரிலே, தமிழக மக்களின் பேராதரவால் நான்கு வருடம் இரண்டு மாத காலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். நான் பொறுப்பேற்ற பொழுது கடுமையான வறட்சி. பல பகுதியிலே குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை. 

 

சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்தோம். அது ஒரு சாதனை. அதற்குப் பிறகு கஜா புயல். டெல்டா மாவட்டம் முழுவதும் அழிந்துவிட்டது. புயலால் அதிமுக ஆட்சியில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு கலந்து பேசி புயல் எந்த அளவுக்கு வீசியதோ புயல் வேகத்தை காட்டிலும் வேகமாக செயல்பட்டு புயலுடைய அடிச்சுவடு இல்லாமல் திறமையாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. அப்படி ஒரு சாதனை படைத்தோம். அதன்பிறகு கரோனா. சாதாரண கரோனா அல்ல முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட கரோனாவை அதிமுக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு கரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தில் இருந்து அகற்றிய அரசாங்கம் அதிமுக அரசாங்கம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.