Skip to main content

பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்த 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Leaders of the India Alliance strongly criticized the BJP

 

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு பெங்களூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க  மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கடுமையாகச் சாடினார்.

 

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் ஆகிய இரண்டுமே ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்கள் மணிப்பூரை எரிப்பார்கள். ஏன் முழு நாட்டையும் எரிப்பார்கள். ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்திரப்பிரதேசமாக இருந்தாலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் கூட விற்று விடுவார்கள்.

 

நாட்டின் மீது அன்பு கொண்டு, நாட்டு மக்கள் துயரப்படும் போது அவர்களும் வருந்துவார்கள். ஆனால், அவர்கள் மனதில் உண்மையில் அப்படியொரு வலி, கவலை, அன்பு இல்லை.  நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைப் பிளவுபடுத்துவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறார். அதனால், மணிப்பூரைப் பற்றி அவர் கவலைப்படாமல் இருக்கிறார்” என்று பேசினார்.

 

Leaders of the India Alliance strongly criticized the BJP

 

அதேபோல், மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்களிடையே மதம், சாதி, வகுப்பு அடிப்படையில் பிரிவினையை உண்டாக்க பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மகளிர்க்கு எதிரான அத்துமீறல் ஆகியவற்றை எடுத்துக்கூறி மாநில அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருகிறது.  மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு நிதியுதவி செய்யவும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.